LATEST NEWS
“ஆம்பளைக்கு யாரு பாதுகாப்பு?”.. நடுரோட்டில் பெண் போலீசாரிடம் சரக்கு போதையில் தவெக வக்கீல் செய்த பகீர் சம்பவம்…!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ‘சிங்கப்பெண்’ காவல் படையினரிடம், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் மிஷ்ரா என்பவர் மதுபோதையில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த பெண் போலீசாரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், காவல் துறையினரின் ரோந்து வாகனத்தில் ஏறி அமர்ந்து தன்னை வீட்டில் கொண்டு போய் விடுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும், பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு கொடுப்பீர்களா, ஆண்களுக்கு வழங்க மாட்டீர்களா என்று கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சார்பு ஆய்வாளர் சண்முகப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின்படி, ஜூலை 27-ஆம் தேதி வரை அவர் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உடனடியாக உறுதி செய்யவும் முதலமைச்சர் விஜய் அவர்களால் கடந்த மாதம் 9-ஆம் தேதி ‘சிங்கப்பெண்’ என்ற இந்தச் சிறப்பு காவல் படை தொடங்கி வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பெண்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களில் இந்தப் படையைச் சேர்ந்த பெண் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக உதவுவதற்கும், குற்றச் சம்பவங்களை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கும் உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்புப் படையினர் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியும் வழக்கறிஞருமான ஒருவர், அரசுப் பணியில் உள்ள பெண் காவலர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்து, தகராறில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காகச் செயல்படும் பெண் காவலர்களிடமே மதுபோதையில் அத்துமீறி நடந்து கொண்டதும், அரசு வாகனத்தைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்குக் கேட்டதும் அராஜகமான செயல் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். சட்டத்தை மதித்துப் நடக்க வேண்டிய ஒரு வழக்கறிஞரே பொது இடத்தில் இவ்வாறு நடந்துகொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
