LATEST NEWS
“ஆதவ் அர்ஜூனா CM ஆயிடுவாருன்ற பயமா..? ஆந்திராவில் NTR-க்கு நடந்த கதை தமிழ்நாட்டிலும் நடக்குமா..?” விஜய்யின் லண்டன் ட்ரிப் பற்றி அப்பாவு போட்ட பகீர் பதிவு..!!
தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர் மற்றும் அரசு ஊழியர்களின் ஆவேசம் காரணமாக செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு, முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காகவே, உங்களால் “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி” என பெயர் மாற்றம் செய்துள்ளீர்கள் என்றும், இதன் மூலம் மக்களின் செல்வாக்கை பெற்றுவிட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேச துணிவில்லாமல், கூட்டணி கட்சித் தலைவர்களை தங்கள் விருப்பப்படி கருத்துச் சொல்லிக் கொள்ளுமாறு கூறியது அவர்களின் நரித்தனத்தின் வெளிப்பாடு என விமர்சித்துள்ளார். மேலும், இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசரநிலையை எதிர்த்ததற்காக மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சித்திரவதையை அனுபவித்த தியாக வரலாற்றை, சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லாதவருக்கு முதலமைச்சர் பதவி ஒரு கேடா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஆந்திர முதலமைச்சர் மறைந்த என்.டி. ராமாராவ் வெளிநாடு சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு ஆட்சியைக் கவிழ்த்து முதலமைச்சரானது போல், இங்கு ஆதவ் அர்ஜூனா முதலமைச்சராகி விடக்கூடாது என்ற பயத்தில்தான் அவரை உங்களுடன் லண்டனுக்கு அழைத்துச் செல்கிறீர்களா என்றும் அப்பாவு தனது சமூக வலைதளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
