LATEST NEWS
நிலவில் பயங்கர விபத்து..! மணிக்கு 8,690 கி.மீ வேகத்தில் மோதி சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்… உருவானது பிரம்மாண்ட பள்ளம்..!!
எலான் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி, விண்வெளியில் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிந்து, தற்போது நிலவின் மேற்பரப்பில் மணிக்குச் சுமார் 8,690 கி.மீ வேகத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிலவு ஆய்வு விண்கலங்களை விண்ணில் செலுத்திய இந்த ராக்கெட், தன் பணி முடிந்த பிறகு சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாகப் பாதை மாறி நிலவை நோக்கி ஈர்க்கப்பட்டது. சுமார் 4,000 கிலோ எடையுள்ள இந்த ராக்கெட் பாகம் மோதிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
நிலவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ‘ஐன்ஸ்டீன் பள்ளம்’ என்ற இடத்திற்கு அருகே இந்த அதிவேக மோதல் நிகழ்ந்துள்ளது. சுமார் 3 டன் டி.என்.டி வெடிபொருளின் சக்திக்கு இணையான இந்த மோதல் தாக்கத்தால், நிலவின் மேற்பரப்பில் 20 முதல் 30 மீட்டர் அகலமுடைய ஒரு புதிய பிரம்மாண்ட பள்ளம் உருவாகியுள்ளது. மேலும், இதனால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக நிலவின் பாறைத் துகள்களும் தூசிகளும் விண்வெளியில் சிதறிப் பரவியுள்ளன.
இந்த அசாதாரணச் சம்பவத்தால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று நாசா (NASA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பொருட்கள் நிலவில் மோதும் போது ஏற்படும் மேற்பரப்பு மாற்றங்களை ஆராய விண்வெளி விஞ்ஞானிகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. நாசாவின் ‘லூனார் ரீகானைசன்ஸ் ஆர்பிட்டர்’ செயற்கைக்கோள் மூலம் இந்த புதிய பள்ளம் மற்றும் நிலவின் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
