CINEMA
“ஜெமினி கணேசனை கல்யாணம் பண்ணாதன்னு சொன்னேன்…!”சாவித்திரியின் கடைசி நாட்களைப் பார்த்தா ரத்தக் கண்ணீர் வரும்…! தோழி பகிர்ந்த அதிர வைக்கும் தகவல்…!
தென்னிந்தியத் திரையுலகில் தனது அசாத்திய நடிப்புத் திறமையால் ‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்பட்டவர் நடிகை சாவித்திரி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து, பல லட்சம் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த இவருடைய திரையுலக வாழ்க்கை எவ்வளவு உன்னதமாக இருந்ததோ, அதற்கு நேர்மாறாக அமைந்தது அவருடைய இறுதி காலம். புகழின் உச்சியில் இருந்து கோடிகளைக் குவித்த சாவித்திரி, தனது வாழ்நாளின் இறுதி நாட்களில் சொல்லொணாத் துயரங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்து, மிகுந்த வேதனையுடனேயே காலத்தைக் கழிக்க நேரிட்டது. அவர் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து சாவித்திரியின் நெருங்கிய தோழியான மத்தாலி சுசீலா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பல உருக்கமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
மத்தாலி சுசீலாமற்றும் சாவித்திரி ஆகிய இருவருக்குமான நட்பு விஜயவாடாவில் உள்ள ஒரு நடனப் பள்ளியில் தொடங்கியது. அங்கு சாவித்திரிக்கு நடனத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்த சுசீலா, நாளடைவில் சாவித்திரியின் மிக நெருங்கிய தோழியானார். பின்னர் மெட்ராஸ் சென்று சினிமாவில் சாவித்திரி புகழ்பெற்ற போது, சுசீலாவையும் சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்குமாறு அழைத்துள்ளார். ஆனால், தனது கணவர் மற்றும் குடும்பத்தைப் பிரிய மனமில்லாமல் சுசீலா அந்த வாய்ப்பை நிராகரித்தார். இதனால் ஆரம்பத்தில் சாவித்திரிக்கு சுசீலா மீது கோபம் இருந்தபோதிலும், பிற்காலத்தில் சுசீலா எடுத்த முடிவே சரியானது என்பதைச் சாவித்திரி உணர்ந்ததாக அந்தப் பேட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் தனிமையிலும் வறுமையிலும் வாடிய சாவித்திரி, தனது தோழி சுசீலாவைச் சந்தித்தபோது தன் மனக்குமுறல்களைக் கொட்டி அழுதுள்ளார். “நீ என்னுடன் திரைத்துறைக்கு வராததற்கு முதலில் கோபப்பட்டேன். ஆனால் நீ வராததே நல்லதுதான். நான் கோடிகளைச் சம்பாதித்தாலும் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, எனக்கு துளியும் சந்தோஷம் இல்லை. என்னுடைய கணவர் என்னை கண்டுகொள்வதில்லை; எனக்குப் பிடித்ததைச் சாப்பிடவோ, பிடித்த புடவைகளைக் கட்டிக்கொள்ளவோ கூட என்னால் முடியவில்லை. நான் அனாதையாக உணர்கிறேன். நீயாவது கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறாய், அது போதும்” என்று கண்ணீருடன் சாவித்திரி கூறியுள்ளார்.
மேலும், ஜெமினி கணேசனைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று தான் பலமுறை சொல்லியும் சாவித்திரி கேட்கவில்லை என்று சுசீலா அந்தப் பேட்டியில் வருத்தத்துடன் நினைவுகூர்ந்துள்ளார். கைநிறையச் சம்பாதித்து, லட்சோப லட்ச ரசிகர்களைத் தன் நடிப்பால் கட்டிப்போட்ட ஒரு மகா நடிகை, கடைசிக் காலத்தில் யாரும் இல்லாமல், அனாதையாகக் கொடிய இறப்பை எதிர்கொண்டது ஒட்டுமொத்தத் திரை உலகையும் கலங்கச் செய்யும் ஒரு பெருஞ்சோகமாகும்.
