CINEMA
கடைசி நிமிடத்தில் கார் ஓட்டுநரிடம் கே.ராஜன் சொன்ன ‘அந்த’ வார்த்தை…!தனிமையை வெல்ல முடியாமல் போன மூத்த தயாரிப்பாளரின் கண்ணீர் கதை…! உறைந்து போன கோலிவுட்…!
தமிழ் திரையுலகில் யாருக்கும் அஞ்சாமல், சினிமா மேடைகளில் உண்மைகளை நெத்தியடியாகப் பேசி வந்த மூத்த தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. ராஜன் (85), சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. எத்தனையோ தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்காக மேடைகளில் சிங்கம் போல கர்ஜித்த ஒரு போராளியின் வாழ்க்கை, இப்படி ஒரு சோகமான முடிவைச் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. திரையுலகில் எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்த இவரது இந்த விபரீத முடிவு, சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் எங்கு சினிமா விழாக்கள் நடந்தாலும் அங்கே கே. ராஜனின் குரல் நிச்சயம் ஒலிக்கும். தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள் குறித்தும், நடிகர்களின் அநியாய சம்பளம் குறித்தும் வெளுத்து வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த அவரது இறுதி நாட்கள் முற்றிலும் தலைகீழாக, மயான அமைதியுடன் இருந்திருக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களாக அவர் எந்தவொரு சினிமா நிகழ்ச்சிகளிலும், சங்கக் கூட்டங்களிலும் பங்கேற்காமல் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, அவர் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்ததும், கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தத் துயரமான ஞாயிற்றுக்கிழமை காலை, வழக்கம்போல வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கார் ஓட்டுநருடன் கே. ராஜன் கிளம்பியுள்ளார். அப்போது கார் அடையாறு ஆற்றங்கரைப் பாலத்தின் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரிடம், “காரை ஓரமா நிறுத்துப்பா… எனக்கு மனசு ஒரு மாதிரியா இருக்கு. கொஞ்ச நேரம் காலாற நடந்துட்டு வரேன்…” என்று கூறியுள்ளார். இதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும். கார் ஓட்டுநர் நடைபயிற்சிக்குச் செல்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், பாலத்தில் இருந்து விறுவிறுவென நடந்த கே. ராஜன், யாரும் எதிர்பாராத விதமாக ஆற்றில் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி கே. ராஜனின் உடலைச் சடலமாக மீட்டனர். அவர் ஏதேனும் தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்ற கோணத்தில் அடையாறு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 1983-ல் ‘பிரம்மச்சாரிகள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, ‘நம்ம ஊரு மாரியம்மா’ போன்ற படங்களை இயக்கி சாதித்த ஒரு சினிமா ஆளுமை, தனது இறுதி நாட்களின் தனிமையை வெல்ல முடியாமல் போனது தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் சோகமாகும்.
