LATEST NEWS
சிங்கப்பெருமாள் கோவில் ஏரியில் மிதந்த சடலம்…சமூகத்தின் நெஞ்சிலறையும் கேள்வி…2 வருசமாகுது, விசேஷம் இல்லையா?…வேலை முடிந்து வீடு திரும்பிய கணவன்… அடுத்த சில மணிநேரத்தில் நேர்ந்த துயரம்… செங்கல்பட்டில் பரபரப்பு…!
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் சிங்கப்பெருமாள் கோவில் முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 34 வயதுடைய முகேஷ் என்பது தெரியவந்தது. இவர் மெல்ரோசாபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
முகேஷுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இவர்களது உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் “இரண்டு வருசமாகுது, இன்னும் விசேஷம் ஏதும் இல்லையா?” என்று தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். சமூகத்தின் இந்தத் தொடர் கேள்விகளாலும், அழுத்தங்களாலும் முகேஷ் கடந்த சில மாதங்களாகவே கடுமையான மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய முகேஷ், தனது மொபைல் போன் மற்றும் தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் வீட்டிலேயே கழற்றி வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடி வந்தனர். இந்தச் சூழலில்தான், அவர் செங்குன்றம் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் உறுதியானது. இச்சம்பவம் குறித்து சிங்கப்பெருமாள் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், “குழந்தை இல்லை” என்று சமூகத்தினர் கொடுத்த மன அழுத்தமே வாலிபரின் மரணத்திற்குக் காரணம் என்ற செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
