CINEMA
மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்ட ஜனகராஜ்…!விபத்தில் கோணலான வாய்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த ‘மௌனராகம்’ ஜனகராஜ்…!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வியந்து பாராட்டிய அந்த ரகசியம்…!
தமிழ் சினிமாவின் 80, 90-களின் மறக்க முடியாத மாபெரும் காமெடி மற்றும் குணசித்திர நடிகர் ஜனகராஜ். பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் உதவி இயக்குனராகச் சேர்ந்து, பின் நடிகராக மாறியவர். ‘மௌனராகம்’ படத்தில் வரும் புகழ்பெற்ற “பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” காமெடி முதல், ரஜினியுடன் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, கமலுடன் ‘நாயகன்’ எனப் பல படங்களில் தனது தனித்துவமான மேனரிசம் மற்றும் டயலாக் டெலிவரியால் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். வயோதிகம் மற்றும் உடல்நிலை காரணமாகச் சமீபகாலமாகச் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், கடைசியாக ’96’ மற்றும் ‘ஒபாமா உங்களுக்காக’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ஜனகராஜின் வாழ்க்கையையும் அவரது பிரசித்தி பெற்ற வாய் கோணல் மேனரிசத்தையும் மாற்றிய ஒரு கொடூர விபத்து குறித்து, கவிஞர் கண்ணதாசனின் மகனும் நடிகருமான அண்ணாதுரை அண்மையில் ஒரு பேட்டியில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். ஒருமுறை புதுச்சேரியிலிருந்து ஜனகராஜ், இயக்குனர் ராபர்ட் ராஜசேகர், கலை இயக்குனர் கலை ஆகியோர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் வீசிய கல் ஒன்று காரில் பலமாகத் தாக்கியுள்ளது. விபத்தின் தீவிரம் தெரியாமல் டிரைவர் காரை ஓட்ட, பின் இருக்கையில் இருந்த ஜனகராஜின் சட்டை முழுக்க ரத்த வெள்ளமாக இருந்துள்ளது. தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
“அந்த விபத்தில் அவர் தலை தப்பியதே பெரிய விஷயம், அப்போதே அவர் இறந்திருக்க வேண்டியது. ஆனால், தலையில் ஏற்பட்ட அந்தப் பாதிப்பால் தான் ஜனகராஜின் வாய் லேசாகக் கோணலானது. உண்மையில் அந்த வாய் கோணல் கடவுள் அவருக்குக் கொடுத்த பரிசு. ஏனென்றால், அதற்குப் பிறகுதான் அவரது காமெடி டைமிங் மற்றும் மேனரிசம் ரசிகர்களிடம் வேற லெவலில் ஹிட் அடித்து, அவரது சினிமா வாழ்க்கை எங்கேயோ போனது” என்று அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட ஜனகராஜை ‘குரு’ என்றுதான் மதிப்போடு அழைப்பார் என்ற சுவாரசியமான தகவலையும் அவர் அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
