CINEMA
எதற்கும் அஞ்சாத சிங்கம், இன்று இல்லையே…!கமல் கொடுத்த ஒரு போன் கால்…!கராத்தே ஹுசைனி அடித்த அடிதடி.. போலீஸிடம் சிக்கிய கே. ராஜன்! ‘ஹேராம்’ ரிலீஸின் போது நடந்த அதிர்ச்சி பின்னணி…!
திரைத்துறையில் எதற்கும் அஞ்சாத, மனதில் பட்டதை தைரியமாகப் பேசும் குணம் படைத்தவர் கே. ராஜன். குறிப்பாக, திரை உலகினரைப் பற்றி அவதூறாகப் பேசி வந்த பயில்வான் ரங்கநாதனை ஒரு திரைப்பட விழாவின் மேடையிலேயே நேருக்கு நேர் வெளுத்து வாங்கிய இவரது துணிச்சல், அப்போது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இப்படிப்பட்ட போல்டான மனிதர், கடந்த சில வருடங்களாகத் தனது குடும்பத்தைப் பிரிந்து தனியாக ஹோட்டலில் வசித்து வந்துள்ளார். 85 வயதான அவர், அண்மையில் சென்னையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரை நிறுத்தச் சொல்லி இறங்கி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இவரது இந்த விபரீத முடிவு குறித்துப் பேசிய கே. ராஜனின் மகன், தன் தந்தை நீண்ட நாட்களாகவே கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். சினிமாவில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி, சிலருக்குக் கொடுத்த பணமும், சிலருக்காகத் தான் வாங்கித் தந்த பணமும் திரும்ப வராமல் போனது போன்ற காரணங்களால் அவர் பெரும் கடனாளியாக மாறியதே இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் பலருக்கும் பல இக்கட்டான சூழலில் குரல் கொடுத்த ஒரு மூத்த கலைஞர், பணப் பிரச்சினையால் இப்படி ஒரு முடிவை எடுத்தது திரையுலகினரை நிலைகுலையச் செய்துள்ளது.
இதற்கிடையில், கே. ராஜனின் மகன் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த 2000-ம் ஆண்டில் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘ஹேராம்’ திரைப்படம் வெளியானபோது நடந்த ஒரு பரபரப்பான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். படம் வெளியான சமயத்தில் அதன் திருட்டு விசிடி பாண்டி பஜார் கடைகளில் விற்கப்படுவதாகக் கமல் போன் செய்து சொல்ல, கே. ராஜன் அங்கு விரைந்துள்ளார். அதற்குள் கமலின் தகவலின் பேரில் கராத்தே ஹுசைனி மற்றும் அவரது ஆட்கள் அங்கு வந்து திருட்டு விசிடி கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த மோதலில் 22 வயது இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்க, பழியெல்லாம் ராஜன் மீது விழுந்துள்ளது. பின்னர் போக்குவரத்து காவலர் ஒருவர்தான் அவரை அங்கிருந்து பத்திரமாக மீட்டு அனுப்பியுள்ளார் என்ற பழைய நினைவுகளையும் அவரது மகன் அந்தப் பேட்டியில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
