CINEMA
ஒருபுறம் ‘ஜன நாயகன்’ லீக் சர்ச்சை மற்றும் ரிலீஸ் பிரச்சனை தீராத நிலையில் வினோத் எடுத்த புது அவதாரம் …!நட்டி நட்ராஜுடன் கைகோர்த்து சத்தமில்லாமல் தயாரிப்பாளராக களமிறங்கிய இயக்குனர் ஹெச். வினோத்…!
தமிழ் சினிமாவில் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘துணிவு’ என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஹெச். வினோத். சமூகத்தில் நடக்கும் எதார்த்தமான அரசியல் மற்றும் பொருளாதார குற்றங்களை மிகவும் துணிச்சலாகவும், விறுவிறுப்பாகவும் திரையில் கொண்டு வருவதில் இவருக்கு நிகர் இவரே. இப்படி இருக்கையில், ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிந்தைய மிக முக்கியமான படம் என்பதால், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.
விமர்சகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களின் கணிப்புப்படி, ‘ஜன நாயகன்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் பல வசூல் சாதனைகளை தவிடுபொடியாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “ஹெச். வினோத்தின் அழுத்தமான திரைக்கதையும், விஜய்யின் மாஸ் ஸ்கிரீன் பிரசன்ஸும் இணையும் போது, அது தியேட்டர்களில் திருவிழா போன்ற கொண்டாட்டத்தை உருவாக்கும். குறிப்பாக படத்தின் வசனங்கள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் விருந்தாக இருக்கும்” என்று சினிமா விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதுவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் உருவெடுத்துள்ளதால், படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், ‘ஜன நாயகன்’ படத்தின் மொத்தப் பதிப்பும் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு, இதுவரை 9 பேரை அதிரடியாகக் கைது செய்து விசாரித்து வருகிறது. படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், ‘ஜன நாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் முறையாக எப்போது வெளியானாலும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வரலாற்று சாதனை படைக்கும் என்று ஒட்டுமொத்த சினிமா துறையினரும், ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
ஒருபுறம் தனது படத்தின் ரிலீஸ் சிக்கல்கள் மற்றும் லீக் பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்க, மறுபுறம் இயக்குநர் ஹெச். வினோத் சத்தமே இல்லாமல் ஒரு புதிய வேலையைச் செய்து வருகிறார். அவர் தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக, ‘குற்றம் கடிதல்’ பட புகழ் இயக்குநர் பிரம்மா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. தனது பெரிய படத்தின் ரிலீஸ் பிரச்சனை இன்னும் தீராத நிலையிலும், வினோத் சொந்தப் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், முதலமைச்சர் விஜய் படம் வெளியாவதில் இனி எந்த சிக்கலும் இருக்காது என்று ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
