CINEMA
இளையராஜாவுக்கு இட்லிக்குக் கூட வழியில்லையா…!”அவரை அவராக இருக்க விடுங்க!” -தனிமையில் இளையராஜா…!”50 வருஷ சாதனையை கேவலப்படுத்தாதீங்க…!பயில்வான் ரங்கநாதன் கொளுத்திப் போட்ட வெடிக்கு விழுந்த பலத்த அடி…!
இசைஞானி இளையராஜா அனாதையாக இருக்கிறார் என்றும், அவருக்கு இட்லிக்கு கூட வழியில்லை என்றும் சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சு அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இளையராஜாவின் தம்பியும், பிரபல நடிகருமான கங்கை அமரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தெரியாத விஷயத்தை தெரிந்தது போல பேசக்கூடாது என்றும், இல்லாத ஒரு விஷயத்தை தேவையில்லாமல் பரப்ப வேண்டாம் என்றும் அவர் பயில்வான் ரங்கநாதனை எச்சரித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கங்கை அமரன், ஊடகத்துறையினருடன் தமக்கு இருக்கும் நீண்ட கால நட்பை நினைவு கூர்ந்தார். பத்திரிகையாளர்கள் எப்போதும் நல்ல விஷயங்களை மட்டுமே எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், பயில்வான் ரங்கநாதன் போன்றவர்கள் எதற்காக இப்படிப்பட்ட அவதூறுகளைப் பரப்புகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். சாதனை படைத்த ஒருவரைப் பற்றி தவறான தகவல்களைப் பேசுவது மட்டமான வேலை என்றும் அவர் சாடினார்.
“இளையராஜா கஷ்டப்படுகிறார், அவரது குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறு. யுவன் ஷங்கர் ராஜா துபாயில் சந்தோஷமாக இருக்கிறார்; கார்த்திக் ராஜா தன் குடும்பத்துடன் நன்றாக இருக்கிறார். எங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பது வெளியில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்? சந்தேகம் இருந்தால் ஒரு வாரம் எங்கள் வீட்டில் வந்து தங்கிப் பார்த்துவிட்டு பேசட்டும்!”
மேலும் பேசிய அவர், தங்களுக்கு வயது 78-ஐ கடந்துவிட்டதாகவும், அண்ணன் இளையராஜாவுக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது என்றும் குறிப்பிட்டார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் சாதனை படைத்து வரும் தங்களை இதுபோன்ற வதந்திகள் மூலம் கேவலப்படுத்துவது மிகுந்த மனவேதனையை அளிப்பதாகக் கூறினார். இதுகுறித்து பயில்வானிடம் தாம் போனில் நேரிடையாகக் கேட்டபோது, அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கங்கை அமரன் அந்த மேடையில் வெளிப்படுத்தினார்.
இளையராஜா தற்போதைய சூழலில் தனிமையை விரும்பி நாடி இருக்கிறார் என்று விளக்கிய கங்கை அமரன், தாம் நேரில் பார்க்கச் சென்றால் கூட அவர் அமைதியாக எழுதிக் கொண்டுதான் இருப்பார் என்றார். எனவே, அவரைப் பற்றி அவதூறுகளைப் பரப்பாமல், அவரை அவராகவே இருக்க விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இந்த விவகாரம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
