LATEST NEWS
அதிமுக 3வது இடத்திற்கு போனதற்கு இவங்கதான் காரணமா…வேலுமணியின் சொந்த கோட்டைக்கே ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி…”என்னை மீறி எப்படி வரலாம்…” எடப்பாடி உத்தரவை காற்றில் பறக்கவிட்ட வேலுமணி…!
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையிலான உள்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடிக்கு எதிராக அணிதிரண்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, வேலுமணியிடம் இருந்த தலைமை நிலையச் செயலாளர், அமைப்புச் செயலாளர் மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய முக்கியப் பதவிகளைப் பறித்தார். பதிலடியாக, வேலுமணி தனது கட்டுப்பாட்டில் உள்ள ‘நமது அம்மா’ நாளிதழ் மற்றும் ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியில் எடப்பாடியை முற்றிலும் புறக்கணித்தார். இதனால் கோபமடைந்த எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்கள் அனைவரையும் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டுத் தனது விசுவாசிகளை அந்த இடங்களில் நியமித்தார்.
வேலுமணியை அவரது சொந்த மாவட்டத்திலேயே முடக்க நினைத்த எடப்பாடி பழனிசாமி, அவருக்குப் பரம எதிரியான முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமியைப் புதிய கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமித்து பலத்த செக் வைத்தார். ஒரு காலத்தில் மேயர், அமைச்சர் எனப் பவர்புல்லாக இருந்த செ.ம.வேலுசாமியை டம்மியாக்கியதில் எஸ்.பி.வேலுமணிக்கு முக்கியப் பங்குண்டு. இதனால், தனக்குக் கிடைத்த புதிய பதவியை எடப்பாடிக்கு நன்றி தெரிவித்து கோவை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி செ.ம.வேலுசாமி அதிரடியாகக் கொண்டாடி வருகிறார். அதுமட்டுமின்றி, எஸ்.பி.வேலுமணியின் கோட்டையான தொண்டாமுத்தூர் தொகுதியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வேலுசாமி தனது அரசியல் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
இந்த உள்கட்சி களேபரங்களால் கடந்த மூன்று வாரங்களாகச் சென்னையிலேயே முகாமிட்டிருந்த எஸ்.பி.வேலுமணி, அண்மையில் கோவை திரும்பினார். அப்போது அவருக்குத் தடபுடல் வரவேற்பு அளித்த அவரது ஆதரவாளர்கள், ‘நமது அம்மா’ நாளிதழ் விளம்பரங்களிலும், போஸ்டர்களிலும் இன்னமும் வேலுமணியையே ‘கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர்’ என்று குறிப்பிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளனர். இந்த போஸ்டர்களில் எடப்பாடி நியமித்த செ.ம.வேலுசாமியின் படம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் பழைய பதவிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி கறாரான உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில், கோவையில் இரு வேலுசாமிகளுக்கும் இடையே வெடித்துள்ள இந்த மாவட்டச் செயலாளர் பதவி மோதல் அதிமுக வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
