LATEST NEWS
“சமாதானமாக போவோம்…” பேசி கொண்டிருந்த போதே பயங்கரம்…! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொடூர கொலை… பகீர் பின்னணி…!!
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கோவிந்தாப்புரா கிராமத்தில் அப்பு கவுடா மற்றும் ரேவணசித்தப்பா ஆகிய இரு தரப்பினரிடையே 10 ஏக்கர் நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்துள்ளது. இந்தச் சொத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் நேற்று ஒரு சமாதானப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
பேச்சுவார்த்தையின் போது இரு குடும்பத்தினருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. அப்போது அப்பு கவுடா தரப்பினர், தாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டபடி மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களால் ரேவணசித்தப்பா குடும்பத்தினரைச் சரமாரியாக வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கர ஆயுதத் தாக்குதலில் துண்டப்பா, சிவபுத்ரா, சந்திரகாந்த், ராகுல், சமர்த் மற்றும் அவர்களது தோட்டத் தொழிலாளி சபீர் பாபுசாப் ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அரவிந்த் மற்றும் சந்தீப் ஆகிய இருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும் வெட்டுக் காயங்களுடனும் படுகாயமடைந்து, மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இக்கொடூரச் செயலைச் செய்துவிட்டுத் தப்பியோடிய அப்பு கவுடா தரப்பைச் சேர்ந்த சசிகாந்த், பிரசாந்த், ரமேஷ் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், நிலவும் பதற்றத்தைக் குறைக்கவும் அந்த கிராமத்தில் தற்போது ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
