LATEST NEWS
PR பில்டப்-லாம் போதும் விஜய் சார்…! முதல்ல மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்க… முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐ.டி விங்…!!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசை, “பொய்க்கால் குதிரை அரசு” என்று அதிமுக ஐ.டி. விங் மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. மாநிலத்தில் அண்மைக் காலமாக ஆங்காங்கே அரங்கேறி வரும் தொடர் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி இந்த விமரிசனம் வைக்கப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் தவெக நிர்வாகி ஒருவரால் மூதாட்டி நகைப் பறிப்புக்காகக் படுகொலை செய்யப்பட்டது, வடலூரில் இளம் பெண் ஒருவரின் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது போன்ற நிகழ்வுகளை அதிமுக தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.
மேலும் ஆலங்குளம் மற்றும் நெல்லை தெற்குப்பட்டியில் மர்ம கும்பல்களால் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர அரிவாள் வெட்டுத் தாக்குதல்களையும் சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. வெறும் விளம்பரங்களையும், பிஆர் (PR) பில்டப்களையும் மட்டுமே நம்பி ஒரு மாநிலத்தை நிர்வகிக்க முடியாது என்பதைப் புதிய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று அதிமுக காட்டமாகத் தெரிவித்துள்ளது. மேடைகளில் வசனங்களை மனப்பாடம் செய்து பேசி ஆட்சியைப் பிடித்த முதல்வருக்கு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது எப்படி என்று தெரியுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குற்றவாளிகளுக்குக் காவல்துறை மீதோ, சட்டத்தின் மீதோ எவ்வித அச்சமும் இல்லை என்றும், ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அமைதியாக வேடிக்கை பார்ப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. எனவே, விளம்பர மோகத்தைக் கைவிட்டு, தன்னை நம்பி வாக்களித்த பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முதலமைச்சர் விஜய் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிமுக ஐ.டி. விங் வலியுறுத்தியுள்ளது.
