LATEST NEWS
இத்தாலி பளிங்கு… பர்மா தேக்கு…₹33,000 வீட்டுக்கு ₹20,00,000 மெயின்டனன்ஸ்…100 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் செட்டிநாட்டு வீடு…வீட்டுக்கு ‘நூற்றாண்டு விழா’ எடுத்த காரைக்குடி குடும்பம்…!
உலகப்புகழ் பெற்ற செட்டிநாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் காரைக்குடி, மண்ணின் பெருமையைப் பறைசாற்றும் உன்னதமான கட்டடக்கலைக்கு என்றும் பெயர் பெற்றதாகும். காலத்தைக் கடந்து கம்பீரமாக நிற்கும் கலைநயமிக்க கட்டுமானங்களும், தமிழர்களின் வாழ்வியல் நெறிகளையும் கூட்டுக்குடும்பப் பண்பாட்டையும் உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. திண்ணை முதல் முற்றம் வரை காற்றோட்டமும் வெளிச்சமும் தாராளமாக உள்ளே வரும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட இந்த வீடுகள், கோடைகாலத்தில் குளுமையாகவும், குளிர்காலத்தில் இதமாகவும் இருக்கும்படி கட்டப்பட்டுள்ளன. பர்மா தேக்கு மரத்தூண்கள், இத்தாலி பளிங்குக்கற்கள், பெல்ஜியம் கண்ணாடிகள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து மெருகூட்டப்பட்ட ஆத்தங்குடி தரை டைல்ஸ் போன்ற உயர்தரப் பொருட்களைக் கொண்டு இந்த வீடுகள் கலைநயத்துடன் கட்டப்படுவதால் இன்றும் தனிச்சிறப்பாகக் கருதப்படுகின்றன.
இந்த பிரம்மாண்ட பாரம்பரியத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பி.எம்.ஏ. வீதியில் அமைந்துள்ள “சிதம்பர விலாஸ்” என்ற வீடு சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 1924-ம் ஆண்டு அண்ணாமலை என்பவரால், அன்றைய காலகட்டத்தில் வெறும் 33,000 ரூபாய் செலவில் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில், பிரமிக்க வைக்கும் அரிய வேலைப்பாடுகளுடன் பார்ப்பதற்கு அப்படியே ஒரு சொகுசு அரண்மனை போல இந்த வீடு தோற்றமளிக்கிறது. தலைமுறைகள் கடந்தும் தங்களது பாரம்பரிய அடையாளத்தை மாறாமல் பாதுகாத்து வரும் இந்த வீட்டை, இப்போது அண்ணாமலையின் ஐந்தாவது தலைமுறையினர் மிகவும் பெருமையோடு பராமரித்து வருகிறார்கள்.
தற்போது இந்த இல்லம் நூற்றாண்டு விழா காண்பதையொட்டி, பிரம்மாண்டமான சில முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே சுமார் 20 லட்சம் ரூபாய் வரை செலவானதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அன்று 33 ஆயிரம் ரூபாயில் கட்டப்பட்ட வீட்டுக்கு, இன்று 20 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளதுதான் ஒட்டுமொத்தப் பகுதியின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காலம் கடந்தும் தங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தங்களது குடும்ப பெருமையைப் பறைசாற்றும் இந்த பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வீட்டைத் தங்களுக்கு வாரிசாக வழங்கிய தங்களது பூட்டனான அண்ணாமலைக்கும், அந்த காலத்தில் இந்த கலைநயமிக்க கட்டடத்தை இழைத்து இழைத்து கட்டிய கூலித் தொழிலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி செலுத்துவதைத் தங்களின் கடமையாக அக்குடும்பத்தினர் கருதுகின்றனர்.
இதற்காகவே இந்த ஐந்தாவது தலைமுறை குடும்பத்தார்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தங்களது அன்பான வீட்டிற்கு முறைப்படி ‘நூற்றாண்டு விழா’ எடுத்து ஒட்டுமொத்த ஊரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இந்த வீட்டின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாகவும், ஆன்மீக மணம் கமழும்படியும் நேற்று நடந்துள்ளது. இந்த விழாவில் ஓசூர், முக்தாபாய் பஜனை மண்டலி அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்ரீபிரியா குமார் குழுவினரின் பக்திமயமான பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாரசியமான பட்டிமன்றம், கண்கவர் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி பரவசமூட்டும் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் வீதி உலா, திவ்ய நாம சங்கீர்த்தனம் போன்றவை வெகு சிறப்பாக நடைபெற்றன. ஒரு வீட்டிற்கு நூற்றாண்டு விழா எடுத்து, அதற்குக் காரணமான தொழிலாளர்களை நினைவுகூர்ந்த இந்த செட்டிநாட்டு குடும்பத்தின் செயல் சமூக வலைத்தளங்களில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
