LATEST NEWS
தலைகீழாக மாறப்போகும் திமுக அரசியல்?.. 234 தொகுதிகளுக்கும் புது பிளான்.. உதயநிதியின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’.. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!!
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த பெரும் தோல்வி, குறிப்பாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், 15-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளிலும் தோற்றது கட்சித் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுக்கள் நடத்திய விசாரணையில், பல மாவட்டங்களில் நிலவிய தோல்விக்கு மாவட்டச் செயலாளர்களின் அதிக்கப்படியான அதிகாரக் குவிப்பும், அவர்களின் செயல்பாடுகளுமே முக்கிய காரணம் எனத் தெரியவந்தது. இந்த அதிகார மையங்களைக் கட்டுப்படுத்தி, கட்சியை அடிமட்டத்திலிருந்து மறுசீரமைக்க தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ‘தொகுதிச் செயலாளர்’ என்ற புதிய பதவியை உருவாக்க திமுக தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இந்த புதிய திட்டத்தின் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தைப் பகிர்ந்து, தொகுதி வாரியாகக் கட்சிப் பணிகளை நேரடியாகக் கண்காணிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இப்புதிய பொறுப்புகளில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால் உதயநிதி ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதன் மூலம் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி கட்டமைப்பு மற்றும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, அடுத்த தலைமுறைத் தலைவர்களை தொகுதி அளவிலேயே உருவாக்கவும், நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய அரசியல் சக்திகளின் எழுச்சிக்கு மத்தியில் இம்மாற்றம் அவசியமாகக் கருதப்பட்டாலும், கட்சிக்குள் இதற்கு முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக வலுவான அதிகார மையங்களாகத் திகழும் சீனியர் மாவட்டச் செயலாளர்கள், இப்புதிய பதவியின் மூலம் தங்களது செல்வாக்கு குறைக்கப்படுவதாகக் கருதுகின்றனர். இதனால், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கட்சியை மீண்டும் வலுப்படுத்துமா அல்லது சீனியர் நிர்வாகிகள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே புதிய அதிகார மோதலை உருவாக்குமா என்ற விவாதம் திமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.
