LATEST NEWS
BREAKING : இடைத்தேர்தலுக்கு விதித்த தடையை நீக்கக் கோரி விஜயபாஸ்கர்கள் வழக்கு..!!
தமிழகத்தின் விராலிமலை மற்றும் கரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை நீக்கக் கோரி , முன்னாள் எம்.எல்.ஏ-க்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி இந்த மேல்முறையீட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முன்னதாக, தேர்தல் வழக்குகளின் இறுதித் தீர்ப்பு வருவதற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் உருவாகும் அரசியல் சாசனச் சிக்கல் ஏற்படும் எனக் கூறி உயர்நீதிமன்றம் இடைத்தேர்தலுக்குத் தடை விதித்திருந்தது. தற்பொழுது, இந்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரி முன்னாள் அமைச்சர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நீட்டித்து, வழக்கின் அடுத்த விசாரணையையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்துள்ளது.
