LATEST NEWS
“அப்பாவைத் தொடர்ந்து மகனும் காணாமல் போகப் போறார்..!” தவெக மேடையில் திமுக-வை அலறவிட்ட வைகை செல்வன்.. சூடான அரசியல் களம்..!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக முதன்மைச் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன், “முந்தைய தேர்தலில் ‘அப்பாவை காணோம்’ எனத் தேடியதைப் போல, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ‘மகனையும் காணோம்’ எனத் தேட வைத்துவிடாதீர்கள்” என்று திமுக-வை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தவெக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த வெறும் 100 நாட்களிலேயே திமுக-வுக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்குக் காவல்துறையினர் அழைத்தபோது தனது தாத்தாவைப் போல 3 மணி நேரம் பாத்ரூமில் பதுங்கி இருந்ததுதான் அவர்களது குடும்ப வீரம் என நையாண்டியாகப் பேசினார். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது திமுக-வின் வாக்குக்கு துட்டு கொடுக்கும் அரசியலுக்குக் கிடைத்த படுதோல்வி என்றும், தவெக தலைவர் விஜய்யின் வருகைக்குப் பின் திராவிடக் கட்சி ஒன்று காணாமல் போகும் என்ற கணக்கின்படி அதிமுக தற்போது பல இடங்களில் டெபாசிட் இழந்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு அழிந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத் திராவிட ஆட்சிகளில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்களின் வீடுகளில் ஒப்பந்ததாரர்கள் பணப்பெட்டியுடன் காத்திருந்த அவல நிலை, தற்போதைய தவெக ஆட்சியில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக வைகைச் செல்வன் பெருமிதத்துடன் தெரிவித்தார். தவெக அமைச்சர்கள் எவர் மீதாவது இன்று ஒரு பைசா ஊழல் குற்றச்சாட்டையாவது எதிர்க்கட்சிகளால் முன்வைக்க முடியுமா என்று சவால் விடுத்த அவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்குத் தப்பித்தவறிக்கூடப் பொய் சொல்லத் தெரியாது என்றும், அவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரைப் போல மக்களின் அசைக்க முடியாத பேராதரவைப் பெற்றுள்ளார் என்றும் புகழ்ந்து தள்ளினார். தவெக-வின் இந்த வரலாறு காணாத அசுர வளர்ச்சியால் மிரண்டுபோயுள்ள திமுக, தங்களது உட்கட்சிச் செயற்குழு கூட்டத்தில் 60 முதல் 80 வயதுடைய சீனியர்களை அறிவாலயத்தை விட்டு அடித்து விரட்டாத குறையாக வெளியேற்றி வருவதாகவும் வைகைச் செல்வன் காரசாரமாகத் தனது உரையில் போட்டுடைத்தார்.
