LATEST NEWS
“யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை… சிவபெருமான் தான் என் கடவுள்!” – காதலனுக்காக மதம் மாறிய முஸ்லிம் பெண்..! கல்யாணம் செய்த கையோடு பாதுகாப்பு கேட்ட புதுமணத் தம்பதி..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தினக்கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்த ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த ரசியா மற்றும் பரேலியின் ஃபரித்பூர் பகுதியைச் சேர்ந்த தோதாராம் ஆகிய இருவருக்கும் இடையே சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. இருவரும் போன் எண்களைப் பரிமாறிக்கொண்டு பேசி வந்த நிலையில், நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், இருவரும் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகக் கழிக்க உறுதியான முடிவெடுத்தனர்.
இதையடுத்து, ரசியா தனது சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாற தீர்மானித்தார். இருவரும் பரேலியில் உள்ள அகஸ்திய முனி ஆசிரமத்தை அணுகி அங்குள்ள ஆசாரியர் கே.கே. சங்காத்தாரிடம் தங்களது விருப்பத்தைக் கூறினர். இருவருடைய அதிகாரப்பூர்வ சான்றிதழ்களையும் ஆய்வு செய்து, அவர்கள் இருவரும் வயது வந்தவர்கள் என்பதை உறுதிசெய்த பிறகு, ஆசாரியர் மதம் மாற்றும் சடங்குகளைச் செய்தார். அதன்படி, ரசியாவின் பெயர் ‘கௌரி தேவி’ என மாற்றப்பட்டது. பின்னர், வேத மந்திரங்கள் முழங்க, இருவருக்கும் மாலை மாற்றப்பட்டு, இந்து முறைப்படி சப்தபதி திருமணம் விமரிசையாக நடத்தி வைக்கப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு பேசிய கௌரி தேவி, இந்த முடிவை யாரோ ஒருவரின் கட்டாயத்தினாலோ அல்லது தூண்டுதலினாலோ தான் எடுக்கவில்லை என்றும், சிறுவயதிலிருந்தே தனக்கு இந்து மதத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும், சிவபெருமானை தனது இஷ்ட தெய்வமாகக் கருதி வந்ததாகவும், நீண்ட நாட்களாகவே சனாதன தர்மத்தை தழுவி சிவபெருமானை வழிபட விரும்பி வந்ததாகவும் கூறினார். இருப்பினும், இந்தத் திருமணத்திற்குப் பிறகு தனது குடும்பத்தினரால் கணவனுக்கும் தனக்கும் ஆபத்து வரக்கூடும் என அஞ்சுவதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் அவர் உள்ளூர் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
