LATEST NEWS
உஷார் ..! இன்ஸ்டாகிராம் பழக்கம்… 155 சவரன் மோசடி… அந்தரங்க போட்டோ காட்டி கொலை மிரட்டல் – சென்னையில் சிக்கிய போலி வழக்கறிஞரின் பகீர் பின்னணி..!!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வசித்து வந்த 33 வயது பெண்ணிடம், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 155 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (27) என்ற அந்த வாலிபர், தான் ஒரு வழக்கறிஞர் என்றும், அந்தப் பெண்ணின் தம்பியின் நண்பர் என்றும் கூறி அறிமுகமாகியுள்ளார். கணவருடனான பிரச்சினைக்குச் சட்டரீதியாக உதவி செய்வதாகக் கூறி, ஆசை வார்த்தைகள் பேசி அந்தப் பெண்ணிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார்.
இதற்கிடையே அந்தப் பெண் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். இருப்பினும், ஹரிகிருஷ்ணன் பல்வேறு அவசரக் காரணங்களைக் கூறி, நகைகளை அடகு வைத்துத் தருவதாக நம்ப வைத்து, கடந்த 2024 ஜூலை முதல் சிறுகச் சிறுக மொத்தம் 155 சவரன் நகைகளைப் பெற்றுள்ளார். பின்னர் பெண்ணும் அவரது கணவரும் நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, தான் ரகசியமாக எடுத்து வைத்திருந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் லீக் செய்துவிடுவேன் என்று ஹரிகிருஷ்ணன் மிரட்டியுள்ளார். மேலும், தான் ஏற்கனவே சிறைக்குச் சென்றவன் என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஹரிகிருஷ்ணன் வழக்கறிஞர் இல்லை என்பதும், திட்டமிட்டு ஏமாற்றியதும் அம்பலமானது. இதையடுத்து, மோசடி மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஹரிகிருஷ்ணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
