LATEST NEWS
“அம்மா இறந்துட்டாங்க, உடனே வாங்க..” மரண செய்தி சொல்லியும் வராத பிள்ளைகள்.. 4 மகன்களைப் பெற்ற தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த சம்பவம்..!!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் நான்கு மகன்கள் இருந்தும், உயிரிழந்த தாயின் இறுதிச்சடங்கில் அவர்கள் யாரும் பங்கேற்காமல் கொள்ளி வைக்கவும் மறுத்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. லதா பாய் என்ற அந்த முதியவர், தனது வாழ்நாள் சேமிப்பு மற்றும் நகைகளை விற்று வாங்கிய வீட்டை அவரது மகன்களில் ஒருவன் ஏமாற்றித் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளார். அதன் பிறகு அந்தப் பெற்ற தாயை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். வயதான காலத்தில் ஆதரவின்றி தவித்த அவரை சமூக அமைப்பினர் மீட்டு, முதியோர் இல்லத்தில் சேர்த்து கடந்த 8 மாதங்களாகப் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இந்தூர் எம்.ஒய். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லதா பாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து ஆசிரமத்தின் மூலம் நான்கு மகன்களுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் யாரும் இறுதிச்சடங்கில் பங்கேற்க முன்வரவில்லை. பிள்ளைகளுக்காக வாழ்ந்த தாய்க்குச் சொந்த மகன்களே துரோகம் இழைத்த நிலையில், ‘பிரியு ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘ஜானகி முதியோர் இல்லம்’ ஆகிய சமூக அமைப்பினர் இணைந்து, லதா பாயின் உடலுக்கு உரிய சடங்குகளைச் செய்து பிராந்திய பூங்கா பகுதியில் தகனம் செய்தனர். கடைசி நேரத்தில் பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும், மனிதநேயத்துடன் இறுதிச்சடங்கு செய்த சமூக அமைப்பினரை பலரும் பாராட்டி வருகின்றனர்
