LATEST NEWS
3 வருசமா பொருத்தது போதும்… காவல்துறையை ஓட ஓட விரட்டிய பெண்கள்..! மதுபானக் கடையை மூடக் கோரி வெடித்த பயங்கர வன்முறை… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள அமோலா கிராமத்தில் அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, மருத்துவமனை மற்றும் ஹனுமான் கோயிலுக்கு அருகில் இந்த மதுபானக் கடை இயங்கி வருவதால், கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகுதி மக்களுக்கு இது பெரும் தொல்லையாக இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதிகாரிகள் மீதான ஆத்திரத்தில் பெண்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தொடக்கத்தில் அமைதியாக நடைபெற்ற இந்தப் போராட்டம், நிலைமையைக்கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் போராட்டக்காரர்கள், காவல்துறை மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகளை கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு தாக்கத் தொடங்கினர்.
இந்த வன்முறைச் சம்பவத்தின் போது, அதிகாரிகளை கிராம மக்கள் துரத்தித் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகளே தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓட்டம் பிடித்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் மற்றும் அப்பகுதி மக்கள் அந்த மதுபானக் கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
