LATEST NEWS
“லண்டன் போனாலும் தாய் மண் உணவு தான் கெத்து…” பச்சை மிளகாயுடன் வடபாவ் சாப்பிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர்..! வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது இரண்டு நாள் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டார். தொழிலதிபர்களை ஈர்க்கும் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு நடுவே, லண்டன் தெருவில் நின்றபடி மகாராஷ்டிராவின் பாரம்பரிய உணவான வடபாவைப் பச்சை மிளகாயுடன் ருசித்து சாப்பிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவருடன் சிவசேனா தலைவர் ராகுல் கனாலும் வடபாவ் சாப்பிடும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், தனது பயணத்தின் போது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ‘ஜய் மகாராஷ்டிரா’ என முழக்கமிட்ட ஷிண்டே, அங்குள்ள மராத்தி சமூக மக்களுடனும் கலந்துரையாடினார்.
மகாராஷ்டிராவுக்கு அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதும், இந்தியா-இங்கிலாந்து இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணியில் இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதுமே அவரது இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கமாகும். முதலீட்டாளர்கள் கூட்டம் மற்றும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கூட்டத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், 2030-க்குள் மகாராஷ்டிரா 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுக்கும் என்ற இலக்கை சுட்டிக்காட்டினார். “லண்டனில் வடிவமையுங்கள், மகாராஷ்டிராவில் உற்பத்தி செய்யுங்கள்” என்று அழைப்பு விடுத்த அவர், இங்கிலாந்து தொழிலதிபர்கள் மகாராஷ்டிராவின் உள்கட்டமைப்பு மற்றும் திறமையான தொழிலாளர்களைப் பயன்படுத்தி முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தப் பயணத்தின் போது, ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் காமன்வெல்த் பொது தலைமைத்துவ அங்கீகாரத்தையும், ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் மாநில ஆளுமை (Statesmanship) விருதையும், லண்டன் மகாராஷ்டிரா மண்டல் சார்பில் ‘குளோபல் பிரைடு ஆஃப் மகாராஷ்டிரா’ விருதையும் அவர் பெற்றார். இதுதவிர, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியைச் சந்தித்து மகாராஷ்டிராவின் விளையாட்டுத் துறை வளர்ச்சி குறித்து விவாதித்தார். இங்கிலாந்து பயணத்தின் நிறைவாக, மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் உறுப்பினர் ராகுல் காலே, 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியின் அசல் ஸ்கோர்கார்டு மற்றும் நினைவு புத்தகத்தை ஷிண்டேவிடம் பரிசாக வழங்கினார்.
