LATEST NEWS
“யார் அந்தப் பெண்..? எனக்கே நினைவில்லை..!” 1986-ல் செய்த தவறு… 40 ஆண்டுகளுக்குப் பின் கைதான முதியவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்..!!
மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா பகுதியைச் சேர்ந்த மோகட் ரோட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணை பாலியல் தொல்லை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 64 வயது முதியவர் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 1986-ஆம் ஆண்டில், சஞ்சய் நகரைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அதன்பின் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாகிவிட்டார். இதனால் நீதிமன்றம் அவருக்கு எதிராக நிரந்தர பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.
40 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, குற்றவாளியின் தோற்றமும் முகமும் முற்றிலும் மாறியிருந்தது. மோகட் ரோட் காவல் நிலைய ஆய்வாளர் விகாஸ் கிஞ்சி மற்றும் தலைமைக் காவலர் ரஃபீக் கான் ஆகியோருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அசோக் குமார் பேருந்து நிலையம் அருகே உள்ள கரும்புச் சாறு கடையில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறை குழு அவரை அதிரடியாகக் கைது செய்தது. முன்னதாக அவர் வசித்து வந்த பழைய முகவரிகளான சஞ்சய் நகர் வீடு மற்றும் கட்டிங் கடை ஆகியவை பூட்டப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட பிறகு 40 ஆண்டுகள் பழைய இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, “எனக்கு மறதி நோய் உள்ளது; 40 ஆண்டுகளுக்கு முன்பு எந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டேன் என்பதே எனக்கு நினைவில் இல்லை” என்று அசோக் குமார் தெரிவித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு ஞாபக மறதிப் பிரச்சினை உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
