CINEMA
“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்..? என் அடையாளத்தையே இழந்துட்டேன்…” மயோசிடிஸ் நோய் பற்றி நடிகை சமந்தா ஓபன் டாக்..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி மற்றும் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு, பான்-இந்திய அளவிலும் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இதற்காக சினிமாவிலிருந்து சிறிது காலம் மெட்டர்னிட்டி பிரேக் எடுக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது கர்ப்ப காலத்தில் உள்ள சமந்தா, 11 கிலோ உடல் எடை அதிகரித்துள்ளதாகவும், இந்த தாய்மைப் பயணம் தனக்கு புதிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து போட்டோஷூட்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது என் அடையாளத்தை நான் இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். எனது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. எனினும் மன உறுதி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற முக்கியமான குணங்களை இந்த நோய் எனக்கு கற்றுக்கொடுத்தது. இதனால் என் வாழ்க்கை இன்னும் மேம்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “இந்த நோய் எனக்கு வராமல் இருந்திருக்கலாம் என நான் நினைத்திருக்கிறேன். ஆனால், இது எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் என் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அங்கமாக மாறிவிட்டன. ‘ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்?’ என்ற கட்டத்தை தாண்டி, இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதோ உள்ளது என்ற தெளிவை அடைய எனக்கு சிறிது காலம் ஆனது” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.
