LATEST NEWS
“காமன்வெல்த் டிரிபிள் ஜம்பில் தமிழக வீரர்கள் அபார சாதனை..! பதக்கங்களை அள்ளிய தமிழக வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை… முதல்வர் அறிவிப்பு..!!”
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வீரர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபு வெண்கலப் பதக்கமும் வென்று தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு ரூ.30 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு ரூ.20 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இவ்விரு வீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயின்று பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழக விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்துள்ளதாகவும், சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.
