LATEST NEWS
அடப்பாவமே..! 78 வருஷமா இங்க ஒரு பாலம் கூட கட்டலயா..? உ.பி-யில் நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!!
நாட்டின் பல்வேறு இடங்களில் நவீன உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்த பின்னரும், ரசூலாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட மிர்சாபூர் லக்கோதியா பஞ்சாயத்தின் பந்தர்ஹா கிராமத்தில் பாண்டு ஆற்றின் குறுக்கே ஒரு நிரந்தர பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் பந்தர்ஹா, பகீதியா, லக்கோதியா, கோலா மற்றும் பச்சியான் பூர்வா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், மூங்கில் மற்றும் மரக்கட்டைகளால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஆபத்தான பாலத்தையே அன்றாடப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தத் தற்காலிகப் பாலத்தைப் பயன்படுத்தாவிட்டால், மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காகச் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் தினமும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து இந்த ஆபத்தான பாலத்தைக் கடக்கின்றனர். குறிப்பாக, பள்ளிச் செல்லும் குழந்தைகள் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைப் பாதுகாப்பாகக் கரை சேர்க்க அவர்களின் புத்தகப் பைகளைத் தங்களின் தோள்களில் சுமந்து கொண்டு பாலத்தைக் கடக்க உதவி செய்கின்றனர். அதுமட்டுமன்றி, கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அவசரக் காலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதிலும், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
தேர்தல் நேரங்களில் மக்கள் பிரதிநிதிகள் நிரந்தரப் பாலம் கட்டித் தருவதாகப் பெரிய வாக்குறுதிகளை அளிப்பதாகவும், ஆனால் தேர்தல் முடிந்ததும் கிராம மக்களின் இந்தப் பிரச்சனையை முற்றிலுமாக மறந்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசின் பல்வேறு வளர்ச்சி உரிமைகோரல்களுக்கு இடையே, கான்பூர் தேஹாட்டின் இந்த கிராம மக்கள் இன்னமும் ஒரு நிரந்தரப் பாலத்திற்காகக் காத்திருக்கின்றனர். எனவே, ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்குத் தினமும் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, பாண்டு ஆற்றின் குறுக்கே அரசு உடனடியாக ஒரு வலுவான நிரந்தரப் பாலத்தைக் கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
