LATEST NEWS
என்னது… இனி UPI இலவசம் இல்லையா..? ரூ.2000-க்கு மேல போனா காசு கட்டணுமா..? வெளியானது முக்கிய அறிவிப்பு..!!
யுபிஐ மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் 56 கோடிக்கும் அதிகமான பயனர்களின் பயன்பாட்டு முறைகளில் மாற்றம் வரவுள்ளது. கடைகள், ஷோரூம்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ரொக்கப் பணம் அல்லது ஏடிஎம் கார்டுகளுக்குப் பதிலாக கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் அல்லது பீம் ஆப் போன்ற யுபிஐ செயலிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கூடுதல் கட்டணப் சுமை வாடிக்கையாளர்களுக்குப் பதிலாக வணிகர்களையே சாரும் என்றும், சிறிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் எவ்வித கட்டணமும் வசூலிக்க முடியாது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் மற்றும் என்பிசிஐ வெளியிட்டுள்ள விவரங்களின்படி, ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தவொரு கட்டணமும் கிடையாது. ஆனால், ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% எம்படிஆர் கட்டணம் விதிக்கப்படும். உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் ரூ.5,000 யுபிஐ மூலம் செலுத்தினால் வணிகர் ரூ.20 கட்டணமாக செலுத்த வேண்டும்; ரூ.10,000 செலுத்தும் போது ரூ.40 கட்டணம் பிடித்தம் செய்யப்படும். ரூ.75,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச கட்டண வரம்பு ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், தனிநபர்களுக்கு இடையேயான பணப்பரிமாற்றம், ரூபே டெபிட் கார்டு பயன்பாடுகள் மற்றும் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை க்யூஆர் கோட் மூலம் பரிவர்த்தனை செய்யும் சிறு வணிகர்களுக்கு எவ்வித கட்டணமும் விதிக்கப்படாது.
இந்த புதிய கட்டண அறிவிப்பு அரசியல் ரீதியாகவும் கடும் விவாதங்களை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், வணிகர்கள் மீதான இந்த கட்டணம் இறுதியில் பொருட்களின் விலையில் சேர்க்கப்பட்டு சாமானிய மக்களையே பாதிக்கும் என்றும், அமெரிக்க நிதி நிறுவனங்களின் அழுத்தத்தாலேயே அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல் ஆம் ஆத்மி கட்சியும் அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளது. இருப்பினும், பாஜக தரப்பில் இந்த விமர்சனங்களை மறுத்து, யுபிஐ மற்றும் ஜன் தன் திட்டங்கள் நரேந்திர மோடி அரசின் தேசிய அளவிலான சாதனைகள் என்றும், எதிர்க்கட்சிகள் காரணமின்றி விமர்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
