LATEST NEWS
இனி யாரும் தனியாக விண்ணப்பிக்க வேண்டாம்… தானாகவே உங்க மகளிர் உரிமைத்தொகை அக்கவுண்டுக்கு பணம் வரும்..! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு..!!
தமிழகத்தில் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படவுள்ள ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக இனி யாரும் தனியாக விண்ணப்ப மனு கொடுக்கத் தேவையில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திருச்சியில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், பொதுமக்கள் பலர் இந்தத் திட்டத்திற்காக அதிக அளவில் மனுக்களை அளித்து வருவதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது, பெண்கள் யாரும் இதற்காகத் தனியாக மனு கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலோ அல்லது அமைச்சர்களின் அலுவலகங்களிலோ வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டுத் தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தற்பொழுது தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், 2026 சட்டமன்றத் தேர்தலின் போது தவெக தனது தேர்தல் அறிக்கையில் இத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது. இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் விஜய் புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கும் போது, ஏற்கனவே பணம் பெற்று வருபவர்கள் மட்டுமின்றி, இதுவரை ஒரு ரூபாய் கூட பெறாத தகுதியான பெண்கள் என அனைவரது பெயர்களும் ஒருங்கிணைக்கப்பட்டுப் புதிய பட்டியல் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் இந்த மெகா திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கும் போது, தகுதியான பயனாளிகள் அனைவரது வங்கிக் கணக்குகளுக்கும் தானாகவே (ஆட்டோமேட்டிக்காக) பணம் வந்துவிடும் வகையில் தகுந்த தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் ரமேஷ் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தவெக அரசு இன்னும் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை என்பதை நினைவூட்டிய அவர், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய பட்ஜெட்டிலேயே இந்த மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு தற்பொழுது தமிழகப் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய நிம்மதியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
