LATEST NEWS
“ஆட்சியிலும் பங்கு.. திமுகவுடனும் நட்பு..” -திருமாவளவன் மீது முதலமைச்சர் விஜய் கடும் அப்செட்.. தூது போகும் ஆதவ் அர்ஜுனா; தவெக கூட்டணியில் மெகா விரிசல்..!!
தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சியான திமுகவுடனும் நட்பு தொடர்வதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளது முதலமைச்சர் விஜய் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அமைச்சரவையிலும் பங்கு… திமுகவுடனும் நட்பு” என்ற திருமாவளவனின் இரட்டை நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜய் ரசிக்கவில்லை என்றும், இது கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது ஆட்சியில் இருந்துகொண்டே எதிர்க்கட்சியுடன் இணக்கம் காட்டுவது நம்பகத்தன்மையைக் குறைக்கும் என்று தனது ஆலோசகர்களிடம் விஜய் வேதனைப்பட்டுள்ளார்.
திருமாவளவனின் இந்த அணுகுமுறையால் அரசு தொடர்பான முக்கியத் தகவல்கள் எதிர்க்கட்சிக்குக் கசிய வாய்ப்புள்ளதாகத் தவெகவின் முக்கிய ஆலோசகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, “அரசியலில் இத்தகைய இரட்டைச் சவாரியை ஏற்றுக்கொள்ள முடியாது, ஆதரவை விலக்கிக் கொள்ள நினைத்தால் தாராளமாக வெளியேறலாம்” என்ற தவெகவின் கடுமையான நிலைப்பாட்டைத் திருமாவளவனிடம் நேரடியாகத் தெளிவுபடுத்த முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காகத் தனது அமைச்சரவையில் உள்ள விசிக பின்னணி கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒரு முக்கிய அசைன்மென்ட்டை விஜய் வழங்கியுள்ளார்.
விஜயின் அதிருப்தி செய்தியை விசிக தலைவரிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவில் திருமாவளவனைச் சந்தித்துப் பேசவுள்ளார். தவெக அரசுக்கான ஆதரவில் விசிக தனது தெளிவான அரசியல் எல்லையை வகுக்க வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை விசிகவின் இந்த முரண்பட்ட போக்கு நீடித்தால், அதற்குப் பதிலாகப் பாமகவுடன் (PMK) தனது அரசியல் கூட்டணியை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் தவெக மறைமுகமாகத் திட்டமிட்டு வருகிறது.
