LATEST NEWS
“ஒரு கட்சியை ஒழிக்கணும்; இன்னொன்றை தனிமைப்படுத்தணும்!”.. தமிழக அரசியலில் அரங்கேறும் நிழல்யுத்தம்.. திருமாவளவன் உடைத்த ரகசியம்..!!
தமிழ்நாடு அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக, அதிமுக ஆகிய இருதுருவ அரசியலை வீழ்த்த, தேசியக் கட்சிகளும் சில சக்திகளும் பின்புலத்திலிருந்து திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தில் வலுவாக இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றை முற்றிலும் காலி செய்யவும், இன்னொன்றைத் தனிமைப்படுத்தவும் டெல்லி தலைவர்கள் வியூகம் வகுத்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார். இதற்காக நூறு பேருடன் தொடங்கப்படும் சாதிச் சங்கங்களின் கூட்டங்களுக்குக் கூட பிரதமர் மோடி அல்லது அமித்ஷா போன்ற தேசியத் தலைவர்கள் நேரில் வரத் தயாராக இருப்பதாகச் சாடியுள்ள அவர், பிராந்திய, சாதி மற்றும் மத உணர்வுகளையும் தூண்டிவிட்டு தமிழகத்தைச் சிதறடிப்பதன் மூலம் ‘ஒரே கட்சி ஒரே ஆட்சி’ என்ற சர்வாதிகார இலக்கை நோக்கி அவர்கள் நகர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான காலம் தொட்டே திமுக-வுக்கு எதிராக வளர்க்கப்பட்ட வெறுப்பு அரசியலை விவரித்த திருமாவளவன், அன்று முதல் இன்று வரை காங்கிரஸ், பாமக, மதிமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி எனத் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட அரசியல் தாக்குதல்களே தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான விதையைப் போட்டதாகக் கூறியுள்ளார். கடந்த காலங்களில் இருதுருவ அரசியலை உடைக்க முயன்ற வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் அல்லது சீமான் போன்ற தலைவர்களால் அதிகபட்சமாக 8% முதல் 10% வரை மட்டுமே வாக்குகளைப் பெற முடிந்த நிலையில், தற்போது புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ 20% முதல் 30% வரையிலான வாக்கு வலிமையுடன் களம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வலுவான மூன்றாவது முனையின் வரவால், இரு திராவிடக் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு, காலம் காலமாக அவர்களுக்கு வாக்களித்து வந்த மக்கள் ஒட்டுமொத்தமாக மாற்றுப் பாதைக்கு மாறத் தொடங்கிவிட்டனர் என்று தனது அரசியல் அலசலை நிறைவு செய்துள்ளார்.
