CINEMA
“அப்போவே வேணாம்னு நினைச்சேன்…” கஸ்தூரி ராஜா ஓப்பனாக சொன்ன அந்த ஒரு விஷயம்.. பின்னணி என்ன?
மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில், நடிகர் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயணன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. தினேஷ் ராஜ் மற்றும் பி. தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா, தனது மகன்களான செல்வராகவன் மற்றும் தனுஷ் ஆகியோரின் திரைப்பயண தொடக்கம் குறித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.
ஆரம்பகாலத்தில் தனது பிள்ளைகள் திரைத்துறைக்கு வருவதை தான் துளியும் விரும்பவில்லை என்றும், சினிமா காட்சிகளுக்குக் கூட அவர்களை அழைத்துச் சென்றதில்லை என்றும் அவர் தெரிவித்தார். பொறியியல் படித்துக்கொண்டிருந்த செல்வராகவன், திடீரென சினிமா மீது ஆர்வம் கொண்டதால், படிப்பை முடித்த பின்னரே அவருக்கு இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக சேர வாய்ப்பளித்ததாகவும், பின்னர் ‘காதல் கொண்டேன்’ மூலம் அவர் மிகப்பெரிய இயக்குநராக உருவெடுத்தார் எனவும் நினைவுகூர்ந்தார். அதேபோல, நடிகர் தனுஷுக்கு தொடக்கத்தில் நடிப்பதில் விருப்பமே இல்லை என்றும், முதல் சில படங்களுக்கு படப்பிடிப்பு தளத்திற்கு அழுதுகொண்டே சென்ற அவர், இன்று கலையுலகை நன்கு புரிந்துகொண்டு சிறந்த நடிகராகவும் இயக்குநராகவும் உயர்ந்திருப்பது தமக்கு பெரும் வியப்பளிக்கிறது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
