CINEMA
“என் குருநாதர்… என் அப்பா…மகள் திருமணத்தில் ராதிகா செய்த அந்த காரியம்…பாரதிராஜா – ராதிகா இடையே இருந்த உண்மையான உறவு இதுதான்! வைரலாகும் வீடியோவால் உருகும் ரசிகர்கள்…!
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவர் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த நடிகை ராதிகாவுக்கும், அவருக்குமான பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் கண்களைக் குளமாக்கி வருகிறது. ராதிகாவின் மகள் ரயானே திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், தன் குருநாதரைக் கண்டதும் ஓடிச்சென்று சிறு பிள்ளை போல அவரைப் பின்னாலிருந்து ராதிகா கட்டிப்பிடிப்பதும், பாரதிராஜா தந்தை ஸ்தானத்தில் இருந்து அவரது கைகளைத் தட்டித் தேற்றுவதும் பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது. உண்மையான தந்தை-மகள் உறவுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த இவர்களது இந்த அன்புத் தருணத்தைப் பகிர்ந்து, ராதிகாவுக்கு இது பேரிழப்பு என்று ரசிகர்கள் தங்களது ஆறுதல்களைக் கூறி வருகின்றனர்.
ராதிகா எனும் மகாநடிகையைத் தமிழ் சினிமாவிற்குத் தந்த பெருமை பாரதிராஜாவையே சேரும். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் அவரை அறிமுகப்படுத்திய போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த எவருமே ராதிகாவை ஒரு கதாநாயகியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், தன் குருவின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் ராதிகா தனது அசாத்திய நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். எத்தனையோ இயக்குநர்களின் படங்களில் நடித்திருந்தாலும், பாரதிராஜாவின் இயக்கத்தில் ராதிகா நடிக்கும் போது மட்டும் அந்தப் பாத்திரங்களில் ஒரு தனித்துவமான ஆன்மா குடியேறிவிடும். கதாநாயகியாக அவரது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி வைத்த பாரதிராஜா, பிற்காலத்தில் ‘கிழக்கு சீமையிலே’ படத்தின் மூலம் ராதிகாவின் ஆகச்சிறந்த இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கிழக்கு சீமையிலே’ படத்தில் விஜயகுமாரின் தங்கையாக, அண்ணன்-கணவன் இருவருக்கும் இடையே தவிக்கும் பாசப் போராட்டத்தை ராதிகா கண்முன்னே நிறுத்தினார். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே, “நீ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வா, உன்னை எப்படி நடிக்க வைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்” என பாரதிராஜா கொடுத்த தைரியமே அந்த மெகா ஹிட் கதாபாத்திரத்திற்குக் காரணமாக அமைந்தது. அண்மையில் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்த போது கூட ராதிகா அவரை நேரில் சந்தித்தார். அப்போது, “நீ நடித்த ‘தாய் கிழவி’ திரைப்படத்திற்கு உனக்குக் கண்டிப்பாகத் தேசிய விருது கிடைக்கும்” என்று பாரதிராஜா ஆரூடம் கூறியிருந்தார். தன் திரைவாழ்வின் ஒவ்வொரு முக்கிய திருப்புமுனையிலும் வழிகாட்டியாக இருந்த தந்தையைத் தேனி மண்ணில் இன்று நல்லடக்கம் செய்யும் வேளையில், ராதிகாவின் இந்த நன்றி மறவா பாசம் ஒட்டுமொத்த திரையுலகையும் நெகிழ்த்தியுள்ளது.
