CINEMA
கடைசி காலத்தை கணிச்சிட்டார்…அவர் கொடுத்த தைரியம் தான்…” இலங்கையில் பிரியாணி கடை…BRR பிரியாணி கடை…” பாரதிராஜாவின் 10 ஆண்டு கால ஆசை… தேனியில் நடக்கப்போகும் அதிரடி…!
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மறைவு தமிழ் சமூகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த பண்ணை நிலத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சேலம் RR பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன், பாரதிராஜாவுடனான தனது நெகிழ்ச்சியான நினைவுகளை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா மற்றும் அரசியல் பயணத்திற்குப் பாரதிராஜா மிக முக்கியமான தூணாக விளங்கினார் எனக் குறிப்பிட்ட அவர், பாரதிராஜாவின் மறைவு தனக்குப் பேரிழப்பு என்றும், அவருக்கு அரசு மரியாதை அறிவித்த தமிழ்நாடு அரசுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
பாரதிராஜாவுக்கும் தமக்கும் இடையே இருந்த நெருக்கமான பாசப் பிணைப்பை விவரித்த தமிழ்ச்செல்வன், “அவரது புதிய வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு என்னை மட்டுமே தனிப்பட்ட முறையில் அழைத்திருந்தார்; அந்தளவிற்கு என் மீது அன்பு கொண்டவர்” என்றார். மேலும், தேனி மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான பிரியாணி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாரதிராஜாவின் பெயரைக் குறிப்பிட்டு ‘BRR பிரியாணி’ என்ற உணவகத்தைத் தேனியில் தொடங்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிராஜா தன்னிடம் வலியுறுத்தி வந்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். ஈழத்தமிழர் போராட்டக் களத்தில் தான் பாரதிராஜாவின் அறிமுகம் கிடைத்ததாகவும், இன்று தாம் இலங்கையில் தொழில் தொடங்குவதற்குக் காரணியாக இருந்து தைரியம் கொடுத்ததே அவர்தான் என்றும் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னது போல, திரையுலகில் பாரதிராஜா சொன்னால் அனைவரும் கட்டுப்படுவார்கள்; அந்தளவிற்குத் துணிச்சல் மிக்கவர்” என்று புகழாரம் சூட்டிய தமிழ்ச்செல்வன், பாரதிராஜா தனது கடைசி காலத்தைக் கணித்தே வாழ்ந்தார் என்றார். வீட்டில் வேலை செய்பவர்களைத் தனது சொந்த பிள்ளைகளாகவும், தாயாகவும் மதித்து அவர் அரவணைத்ததாகக் கூறிய அவர், பாரதிராஜாவின் குடும்பத்தினர் அவரைக் கடைசி வரை கைவிடவில்லை என்றும், மருத்துவமனையில் அனுமதித்து உயர் சிகிச்சை அளித்தது வரை அனைத்துப் பணிகளையும் குடும்பத்தினரே முன்னின்று கவனித்துக் கொண்டனர் என்றும், இறக்கும் தருவாயில் மட்டுமே உடன் இருக்க முடியாமல் போய்விட்டது என்றும் கூறி அஞ்சலி நிகழ்வில் நிலவி வந்த சில வதந்திகளுக்கு உணர்வுப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்தார்.
