LATEST NEWS
ரீல்ஸ் வீடியோவில் சிக்கிய மரணம்…!! சுற்றுலா சென்ற இடத்தில் 400 அடி ஆழ பள்ளத்தில் குதித்த கல்லூரி மாணவர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!
வேலூர் மாவட்டம் காட்பாடி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரத் (21), தனது நண்பர்கள் 11 பேருடன் தேனி மாவட்ட எல்லையிலுள்ள கொழுக்குமலைக்குச் சுற்றுலா சென்றுள்ளார். கேரள மாநிலம் சூரியநல்லி வழியாக ஜீப் மூலம் நேற்று அதிகாலை கொழுக்குமலைக்குச் சென்ற அவர்கள், காலை 6 மணியளவில் ‘சிங்கப்பாறை’ என்ற இடத்தில் நின்று சூரிய உதயத்தைக் கண்டு ரசித்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக பரத் அங்குள்ள சுமார் 400 அடி ஆழமுள்ள பயங்கரப் பள்ளத்தில் திடீரெனக் குதித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கொடுத்த தகவலின் பேரில், கேரள தீயணைப்புப் படையினரும் வனத்துறையினரும் பல மணி நேரம் தேடி அவரது உடலைப் பிணமாக மீட்டனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து குரங்கணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவரின் தற்கொலைக்கான காரணம் காதல் தோல்வியா அல்லது வேறு ஏதேனும் குடும்பப் பிரச்சினையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பரத் பள்ளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் அந்தப் பயங்கரமான நொடிகள், அங்கு மற்ற இளைஞர்கள் எடுத்துக்கொண்டிருந்த ‘ரீல்ஸ்’ வீடியோவில் தற்செயலாகப் பதிவாகியுள்ளது. நெஞ்சை உலுக்கும் அந்தத் தற்கொலைக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருவதுடன், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
