CINEMA
கே. பாலச்சந்தர் ‘டைரக்டர்’ என அழைத்த ஒரே நபர்…பாரதிராஜாவின் வாழ்க்கையில் ஒளிந்திருந்த மறுபக்கம்…பொதுவெளியில் ‘டைரக்டர்’ என்று தனித்துவமாக அழைக்கப்பட்ட ஒரே பெருமை இயக்குநர் இமயம் பாரதிராஜாவையே சாரும்…!
தமிழ் சினிமாவின் முன்னோடியும் ‘இயக்குநர் சிகரம்’ என்று போற்றப்படுபவருமான கே. பாலச்சந்தரால், பொதுவெளியில் ‘டைரக்டர்’ என்று தனித்துவமாக அழைக்கப்பட்ட ஒரே பெருமை இயக்குநர் இமயம் பாரதிராஜாவையே சாரும். தமிழ்நாடு அரசு விருது, தேசிய விருது, பத்மஸ்ரீ எனப் பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்றவர். ஸ்டூடியோக்களின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை, வெட்டவெளிக்குக் கூட்டிவந்து, நதியின் குளிர்ச்சியையும், தென்றலின் வாசத்தையும், இயற்கையான சூரிய வெளிச்சத்தையும் திரைமொழியாக்கிக் காட்டியவர் இவர்தான். இவரது ரத்தமும் சதையுமான யதார்த்த கதைக்களங்களும், சமூகக் கருத்துகளும் அடுத்தடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு ஒரு பல்கலைக்கழக வகுப்பறையாக விளங்குகின்றன.
அவர் இயக்கிய 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், அவரது திரை ஆளுமையை உணர்த்தும் சில முக்கியப் படங்கள் என்றும் அழியாத முத்திரை பதித்தவை. தனது முதல் படமான ’16 வயதினிலே’ மூலம் தமிழ் சினிமாவுக்கான புதிய பாதையை வகுத்துக் கொடுத்தார். தொடர்ந்து வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ வெற்றி பெற்றாலும், “இவர் கிராமத்துக் கதைகளை மட்டுமே எடுக்கும் சீசன் இயக்குநர்” என்ற விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சன மலையைத் தன் திறமையால் உடைத்தெறிய, பாரதிராஜா கையில் எடுத்த ஆயுதம் தான் ‘சிகப்பு ரோஜாக்கள்’. அதுவரை யாரும் பார்த்திராத ஒரு சைக்கோ த்ரில்லர் கதையைக் கச்சிதமாக இயக்கி, தான் எந்தவொரு எல்லைக்குள்ளும் சுருங்கிவிடாத இமயம் என்பதை நிரூபித்தார்.
சமூக விழிப்புணர்வையும் சாதிய ஒழிப்பையும் தனது திரைப்படங்கள் மூலம் உரக்கப் பேசியவர் பாரதிராஜா. பெண் சிசுக்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை, ஒரு பிரச்சாரப் படமாக இல்லாமல் மிக நேர்த்தியான திரைமொழியில் கையாண்டு தேசிய விருது பெற்ற திரைப்படம் ‘கருத்தம்மா’. தன் தாயின் பெயரையே இப்படத்திற்கு வைத்ததோடு, அதையே தனது பெயரின் முதலெழுத்தாகவும் (Initial) கொண்டவர். அதேபோல், சாதியப் பிரிவினைகளுக்கு எதிராகப் பளார் கேள்விகளை எழுப்பிய ‘வேதம் புதிது’ திரைப்படம் மூலம் மக்களுக்கு அரசியல் கற்பித்தார். கலைகளின் வழியே சமூக மாற்றத்திற்கு வித்திட்டதோடு, ஈழத்தமிழர் போராட்டக் களங்களிலும் முன்னின்ற இந்த மாபெரும் கலைஞன், தமிழ் சினிமாவின் இதயத்துடிப்பாக என்றென்றும் வாழ்வார்.
