CINEMA
“என் இனிய தமிழ் மக்களே..” இனி இந்தக் குரல் ஒலிக்காது…இந்திய அரசை அதிரவைத்த போர்க்குரல்..” பத்மஸ்ரீ விருதைத் தூக்கி எறிந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா…திரையுலகைத் தாண்டி பாரதிராஜா நடத்திய அதிரடி அரசியல் புரட்சிகள்…!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக ஆளுமைகள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் ஜூன் 11ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், மே 17 இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பாரதிராஜாவுக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், படித்த, நகரத்தன்மையான கதைகளில் மூழ்கியிருந்த தமிழ்த் திரையுலகைச் சாமானியத் தமிழர்களின் வாழ்வியலை நோக்கித் திருப்பிய மாபெரும் ஆளுமை அவர் என்றும், ‘என் இனிய தமிழ் மக்களே!’ என்ற அவரது கரகரத்த குரல் தமிழ் மக்கள் மீதான பேரன்பின் அடையாளம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
திரையுலகிற்கு அப்பாற்பட்டு தமிழின உரிமைகளுக்காக பாரதிராஜா முன்னெடுத்த களப் போராட்டங்களையும் மே 17 இயக்கம் நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளது. காவிரி உரிமைப் போராட்டம், முல்லைப்பெரியாறு அணைப் பாதுகாப்புப் பேரணி எனப் பலவற்றில் முன்னின்று போராடியவர் அவர். குறிப்பாக, 2009 ஈழ இனப்படுகொலை போரின் போது இந்திய அரசின் போக்கைக் கண்டித்து, தனக்கு வழங்கப்பட்ட உயரிய ‘பத்மஸ்ரீ’ விருதைத் திருப்பி அளித்து போர்க்குரல் கொடுத்தார். ராமேஸ்வரத்தில் திரையுலகினரைத் திரட்டி அவர் நடத்திய கண்டனப் போராட்டம் மற்றும் சென்னைக்கு வந்த சோனியா காந்திக்குக் கருப்புக்கொடி காட்டி சிறை சென்றது உள்ளிட்ட அவரது துணிச்சலான செயல்பாடுகள் தமிழின வரலாற்றில் என்றும் அழியாதவை என்று அந்த அறிக்கையில் போற்றப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் நினைவேந்தல் கூட்டத்திற்காகக் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட தோழர்களின் விடுதலைக்காகத் துணிந்து குரல் கொடுத்தவர் பாரதிராஜா. தமிழினத்தின் உயர்விற்குப் பங்களித்த அவரது வாழ்வைப் போற்றும் விதமாக, கடந்த 2026 மார்ச் மாதத்தில் மே 17 இயக்கம் அவருக்கு ‘அருந்திறல் தமிழர்’ என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிப் பெருமை சேர்த்தது. தனது இறுதிக்காலம் வரை தமிழ் கலையுலகிற்காகவும், தமிழின உரிமைக்காகவும் அயராது குரல் எழுப்பிய ஒப்பிட முடியாத மாபெரும் கலைஞனான ஐயா பாரதிராஜா அவர்களுக்கு எங்களது இறுதி மரியாதையையும், வீரவணக்கத்தையும் செலுத்துகிறோம் என திருமுருகன் காந்தி தனது பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
