LATEST NEWS
ரூ.250 முதல் ரூ.440 வரை ஃபைன்…இனி வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தாலும் அவ்ளோதான்…ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! ஸ்லீப்பர், ஏசி கோச்சுகளில் பயணிப்பவரா நீங்கள்? இந்திய ரயில்வேயின் அதிரடி எச்சரிக்கை…!
அவசரத் தேவைக்காகக் கடைசி நேரத்தில் ரயில் பயணத்தைத் திட்டமிடும் பலர், கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் ஜெனரல் டிக்கெட் அல்லது வெயிட்டிங் லிஸ்ட் (Waiting List) டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு நேரடியாக ஸ்லீப்பர் அல்லது ஏசி கோச்சுகளில் ஏறிவிடுகின்றனர். இது ஒரு சாதாரண விதிமீறல் அல்ல என்றும், இதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்திய ரயில்வே பயணிகளை எச்சரித்துள்ளது. ரயில்வே விதிகளின்படி, ஜெனரல் டிக்கெட் என்பது முன்பதிவு செய்யப்படாத (Unreserved) பொதுப் பெட்டிகளில் பயணிப்பதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது; ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணிக்க முறையான முன்பதிவு டிக்கெட் இருப்பது அவசியமாகும்.
இதே கட்டுப்பாடு ஆன்லைன் அல்லது கவுண்டர்களில் பெறப்பட்ட வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும். கவுண்டரில் வாங்கிய வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தாலும், அதனை வைத்துக்கொண்டு ரிசர்வ் செய்யப்பட்ட கோச்சுகளில் பயணிக்க அனுமதியில்லை. இருப்பினும், ரயிலில் காலியிடங்கள் ஏதேனும் இருந்தால், ரயிலில் இருக்கும் பயணச்சீட்டு பரிசோதகரிடம் (TTE) உரிய கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி, உங்களது ஜெனரல் டிக்கெட்டை ஸ்லீப்பர் அல்லது ஏசி டிக்கெட்டாக மேம்படுத்திக்கொள்ளும் (Upgrade) வாய்ப்பு மட்டுமே பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
அப்படி செய்யாமல், உரிய அனுமதியின்றி ஸ்லீப்பர் கோச்சில் ஜெனரல் டிக்கெட்டுடன் பயணிப்பது கண்டறியப்பட்டால், குறைந்தபட்சம் 250 ரூபாய் அபராதத்துடன் சேர்த்து, அந்த பெட்டிக்கான கட்டண வித்தியாசமும் வசூலிக்கப்படும். இதே தவறை ஏசி கோச்சில் செய்தால், அபராதம் 440 ரூபாய் வரை உயரக்கூடும். சில நேரங்களில் அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல், அடுத்த ரயில் நிலையத்தில் உங்களை ஜெனரல் கோச்சுக்கு மாறும்படியும் டிடிஇ உத்தரவிடலாம். எனவே, தேவையற்ற அபராதத்தையும் பயணச் சிரமங்களையும் தவிர்க்க, ரயில் பயணத்திற்கு முன் விதிகளையும் டிக்கெட்டின் நிலையையும் உறுதி செய்து கொள்வதே புத்திசாலித்தனம்.
