CINEMA
நீ போட்டிருக்க டீ-ஷர்ட் என்ன கலர்?…உன்னைப் பார்க்க ரவுடி மாதிரி இருக்கு…0 வருஷத்துக்கு அப்புறம் இணைந்த ‘பிச்சைக்காரன்’ கூட்டணி…மேடையில் கண் கலங்கிய பா.இரஞ்சித்… ஏன் தெரியுமா?…
‘பூ’, ‘சொல்லாமலே’, ‘பிச்சைக்காரன்’ போன்ற உணர்வுப்பூர்வமான சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணியில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள திரைப்படம் ‘நூறு சாமி’. விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பில் சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னணி இயக்குனர் பா.இரஞ்சித், தனது கல்லூரி காலத்திலும், சினிமா உதவி இயக்குனர் வாய்ப்புத் தேடியபோதும் இயக்குனர் சசியுடன் நிகழ்ந்த சுவாரசியமான மற்றும் நெகிழ்ச்சியான நினைவுகளை மேடையில் பகிர்ந்துகொண்டார்.
பா.இரஞ்சித் சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் பிரசன்னாவை அங்கு சேர்ப்பதற்காக இயக்குனர் சசி வந்துள்ளார். அப்போது சீனியர் மாணவரான இரஞ்சித், சசியை நேராக பிரின்சிபால் அறைக்கு அழைத்துச் சென்று, “இவர் எனக்குத் தெரிந்தவர், இவருக்கு நீங்கள் சீட் கொடுத்தே ஆக வேண்டும்” என்று உரிமையோடு சண்டை போட்டு பிரசன்னாவிற்குச் சீட் வாங்கித் தந்துள்ளார். அதன் பிறகு, சினிமாவில் இயக்குனராகும் ஆசையில் சசியிடம் உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு இரஞ்சித் சென்றபோது, சசி அவரிடம் “நீ போட்டிருக்கும் டீ-ஷர்ட் என்ன கலர்?” என்று திடீரெனக் கேட்டுள்ளார். ஓவியரான தனக்கு அந்த நிறத்தைக் சட்டெனக் கூறத் தெரியாமல் திணறிய இரஞ்சித், பின்னர் வெளியே சென்று தனது சட்டையின் நிறத்தைக் கூர்ந்து கவனித்துவிட்டு வந்து மிகச் சரியாகப் பதிலளித்துள்ளார்.
இரஞ்சித்தின் இந்தச் செயலைக் கண்ட இயக்குனர் சசி, “உன்னைப் பார்க்க ரவுடி மாதிரி இருந்தாலும், கேட்ட கேள்விக்குத் தெரியாத பதிலை வெளியே போய்த் தேடிக் கண்டுபிடித்துச் சொன்னாய்; இந்த குவாலிட்டி சினிமாவுக்கு மிக முக்கியம்” என்று பாராட்டியுள்ளார். அப்போது தன்னிடம் வாய்ப்பு இல்லாததால் வேறு ஒரு இயக்குனரிடம் செல்லுமாறு சசி வழிகாட்டியுள்ளார். இந்த நினைவுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட பா.இரஞ்சித், “நான் அவர் சொன்ன இயக்குனரிடம் செல்லவில்லை என்றாலும், இன்று ஒரு இயக்குனராக என்னிடம் வாய்ப்பு கேட்டு வருபவர்களை எப்படி அன்போடு நடத்த வேண்டும் என்ற உன்னதமான பண்பை சசி சாரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்” எனக் கூறினார். பா.இரஞ்சித்தின் இந்த நெகிழ்ச்சியான பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகிப் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
