LATEST NEWS
“காவல் நிலையத்திலேயே அறுத்தெறியப்பட்ட தாலி…” மகளை கடத்த முயன்ற பெற்றோர்… அடுத்த நொடியே நடந்த பரபரப்பு சம்பவம்…!!
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா கந்தவார பகுதியைச் சேர்ந்த அருண்குமாரும், நிம்மகலாகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சைத்ராவும் கடந்த ஐந்து வருடங்களாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், தடைகளைத் தாண்டி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு ஆலயத்தில் வைத்துத் தங்களது திருமணத்தை செய்து கொண்டனர்.
அதன் பின்னர், சைத்ராவின் உறவினர்களால் தங்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு வேண்டி அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அப்போது, பேச்சுவார்த்தைக்காக வந்த பெண் வீட்டார் காவல் நிலைய வளாகத்திலேயே மணமகளைப் பலவந்தமாகக் கடத்த முயன்று, அவரது தாலியையும் அறுத்தெறிந்த விபரமறிந்து மணமகன் கண்ணீருடன் புகாரளித்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து துரிதமாகச் செயல்பட்ட போலீசார், கடத்தப்பட்ட இளம் பெண்ணை அதிரடியாக மீட்டு காவல் நிலையத்திற்கு வரவழைத்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது, “தான் தனது கணவர் அருண்குமாருடன் மட்டுமே இணைந்து வாழ்வேன்” என்று சைத்ரா காவல்துறையினரிடம் மிக உறுதியாகத் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட போலீசார், பாதுகாப்பு கருதி காவல் நிலைய வளாகத்திலேயே இருவருக்கும் அதிகாரிகள் முன்னிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். புதுமணத் தம்பதிகளை வாழ்த்திய காவல்துறை அதிகாரிகள், அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கி பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
