CINEMA
சொன்ன சொல்லைக் காப்பாற்றிய விஜய் – ராஷ்மிகா ஜோடி…இது எங்கள் சிறிய கனவின் தொடக்கம்…திருமணத்திற்குப் பின் விஜய் தேவரகொண்டா எடுத்த அதிரடி முடிவு…180 மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு ட்வீட்…!
திரையுலகில் தனக்கென தனிப் பாதையை உருவாக்கி வரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது காதலில் விழுந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆண்டு எளிமையான முறையில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக அரங்கேறியது. பின்னர் ஹைதராபாத்தில் நடந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு இந்த ஜோடியை வாழ்த்தினர்.
திருமணம் முடிந்த கையோடு விஜய் தேவரகொண்டா, தனது மனைவி ராஷ்மிகாவுடன் தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் உள்ள தனது பூர்வீக கிராமமான தும்மன்பேட்டுக்குச் சென்றார். அங்கு அவர், தனது தந்தை பிறந்த அந்தப் பகுதியில் உள்ள 44 அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தேவைகளுக்காக, தனது ‘தேவரகொண்டா ஃபவுண்டேஷன்’ மூலம் கல்வி உதவித்தொகை (Scholarship) வழங்கப்படும் என்று நெகிழ்ச்சியோடு ஒரு நற்பணியை அறிவித்திருந்தார். இவர்களது இந்த சமூக அக்கறை கொண்ட செயல் பொதுமக்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில், தான் கொடுத்த வாக்கினை நிறைவேற்றும் விதமாக விஜய் தேவரகொண்டா தற்போது தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அச்சம்பேட் மண்டலத்தில் கடினமாக உழைத்து, தங்களது பெற்றோர்களைப் பெருமைப்படுத்திய 180 மாணவ, மாணவிகளின் பட்டியலை அவர் பகிர்ந்துள்ளார். தங்களின் சிறிய கனவின் தொடக்கமாக இந்த முயற்சி அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திர தம்பதிக்கு, சொன்ன சொல்லைக் காப்பாற்றி மாணவர்களின் கல்விக்குக் கரம்கொடுத்ததற்காக சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
