CINEMA
விஜய் அரசியலுக்கு வர அம்மா ஓகே சொன்ன கதை…விமர்சிப்பவர்கள் எல்லாம் தெரு நாய்களா?…அவங்களுக்கு பிஸ்கட் இல்ல, பிரியாணி தான் பிடிக்கும்…மன்னிப்பு கேட்கக் கோரி வலுக்கும் முழக்கங்கள்! லாரன்ஸின் ‘அந்த’ ஒரு வார்த்தையால் சோஷியல் மீடியாவில் கிளம்பிய புயல்!…
நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் எனப் பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரவிருப்பதாக அண்மையில் அறிவித்திருந்த நிலையில், இன்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கருத்து சோசியல் மீடியாவில் கடுமையான சர்ச்சையையும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது. முன்னதாக, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தனது தாயாரின் சம்மதத்துடன் தாம் அரசியலில் கால்திக்கவிருப்பதாக லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன், தான் தவெக-வில் இணைவாரா, அண்ணாமலையுடன் கைகோர்ப்பாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்ற விவாதங்களுக்கு மத்தியில், ரசிகர்களின் கருத்துக்களைக் கோரியிருந்தார். இதனால் அவர் திருச்சியில் நடக்கும் இடைத்தேர்தலில் தவெக சார்பில் களம் காண்பார் என்ற யூகங்களும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக ஓடிக்கொண்டிருந்தன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகவா லாரன்ஸ், முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய ஆட்சி முறையைப் பாராட்டிப் பேசினார். குறிப்பாக, கோயில் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடைகளை மூடியதற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “யாராவது புது ஆள் வந்தால் ரோட்டில் இருக்கும் தெரு நாய் கூட கத்தும். அந்தத் தெரு நாய்க்குப் பிடித்த பிஸ்கட்டைப் போட வேண்டும்; சில நாய்களுக்குப் பிரியாணி பிடிக்கும். அதற்குப் பிடித்ததைப் போட்டு அது நம்மைக் கத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வீட்டுக்கே இப்படி என்றால் ஒரு நாட்டை கொடுத்திருக்கிறீர்கள், கொஞ்சம் நேரம் கொடுங்கள்; மாற்றம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டார்.
மாற்றத்தை விமர்சிப்பவர்களை ‘தெரு நாய்’களுடன் ஒப்பிட்டு லாரன்ஸ் பேசிய இந்த விசித்திரமான உதாரணம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி, நெட்டிசன்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் எல்லாம் தெரு நாய்களா? மக்களை இப்படி இழிவுபடுத்திப் பேசும் தைரியத்தை லாரன்ஸுக்கு யார் கொடுத்தது?” என்று பலரும் சகட்டுமேனிக்கு அவரை விமர்சித்து வருகின்றனர். லாரன்ஸ் உடனடியாகப் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், தனது சர்ச்சை கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இணையத்தில் கோரிக்கைகள் வலுத்து வருவதால் அரசியல் களம் சூடேறியுள்ளது.
