CINEMA
2021 மிஸ்ஸிங்…விஜய் சி.எம் ஆனதுக்கு இதான் காரணமா?…அவர் வந்திருந்தா தமிழ்நாடு வேற லெவல்…விஜய் இருக்கும் இடத்தில் ரஜினி… சூப்பர் ஸ்டார் மனைவியின் பேட்டியால் கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு…!
90-களிலிருந்து தமிழக அரசியலில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம் என்றால், அது நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைதான். கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தலில் அவர் கொடுத்த வாய்ஸ் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் நேரடியாக அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பல ஆண்டுகால எதிர்பார்ப்புக்குப் பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு “நான் அரசியலுக்கு வருவது உறுதி; எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும்” என்று ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு, தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், எதிர்பாராத விதமாக கோவிட் பெருந்தொற்று மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவிலிருந்து கடைசி நேரத்தில் பின்வாங்கினார். இதற்கிடையே, நடிகர் விஜய் கட்சி தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே தேர்தலைச் சந்தித்து, தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். விஜய்யின் இந்த அரசியல் வெற்றியைப் பார்க்கும் ரஜினி ரசிகர்கள், “விஜய் இருக்கும் இடத்தில் ரஜினி இருந்திருக்க வேண்டியது” என்று இப்போதும் ஆதங்கப்படுகின்றனர். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த்கூட, “நான் 2021-ல் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பேன்” என்று தனது பழைய அரசியல் வாய்ப்பு குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் முடிவு குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வராமல் போனது ஒரு மிகப்பெரிய ‘மிஸ்’ என்று குறிப்பிட்டுள்ள அவர், “அவர் வந்திருந்தால் தமிழகத்திற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும்; ஏனெனில் அவரிடம் பல நல்ல திட்டங்களும் கனவுகளும் இருந்தன. சிங்கப்பூரின் லீ குவான் யூ போல தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை (Vision) அவருக்கு இருந்தது. ஆனால், கெடுவாய்ப்பாக கோவிட் காலத்தில் சூழல் காரணமாக அவர் அந்த முடிவை எடுக்க வேண்டியதாகிவிட்டது; ஒரு பெரிய தலைவரை தமிழகம் மிஸ் செய்துவிட்டது” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
