CINEMA
த்ரிஷா, விஜய் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஜினி சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை…அவர் சொன்னதுதான் என்னை டென்ஷன் ஆக்குச்சு…கமல் கொடுத்த அதிர்ச்சி.. ‘தர்மன்’ மேடையில் ரஜினி ஓப்பன்பேச்சு…!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் இன்று சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு ‘தர்மன்’ என அதிரடியாகப் பெயரிடப்பட்டுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளையிலிருந்து (25.06.2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், “நான் மேடையில் பேசினாலே பிரச்சினைதான். ஒன்னு எனக்கு பிராப்ளம் வரும், இல்லை என்றால் மற்றவர்களுக்கு வரும். நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது; ஆனால் நம்மை பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்கும் என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம், அதனால் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” எனத் தனது பாணியில் கலகலப்பாகவும் அதிரடியாகவும் பேசினார்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் தேர்வு குறித்துப் பகிர்ந்த ரஜினி, “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த படத்திற்கு அஸ்வந்த் மாரிமுத்து நான்காவது இயக்குனர். முதலில் ரவிக்குமார், பிறகு சுந்தர் சி, அதன்பின் சிபி சக்கரவர்த்தி எனப் பலரிடம் பேசிய பிறகுதான் அஸ்வந்த் மாரிமுத்து உள்ளே வந்தார். அஸ்வந்த் கதை சொன்ன பிறகு கமல் என்னிடம் வந்து, ‘நான் கதையும் கேட்க மாட்டேன், எல்லாத்தையும் உங்களிடமே விட்டு விடுகிறேன்’ என்றார். அவ்வளவு பெரிய ஜாம்பவான் என் மீது முழு பொறுப்பையும் போட்டது என்னை மேலும் டென்ஷன் ஆக்கியது. அதன் பிறகு ரிஸ்க் வேண்டாம் என கமலிடமும் கதையைக் கேட்கச் சொன்னேன். அவருக்கும் கதை மிகவும் பிடித்திருந்தது. அஸ்வந்த் மிகவும் எனர்ஜியான இயக்குநர், அவருடைய ‘டிராகன்’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார்.
மேலும், உலகநாயகன் கமல்ஹாசனுடனான தனது நீண்டகால நட்பு குறித்துப் பேசிய ரஜினிகாந்த், தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் கமல் செய்த முக்கிய உதவியை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். “என் சினிமா கெரியரில் திருப்புமுனையாக அமைந்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் முதலில் ஜெய்சங்கர் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கமல் தான் அந்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரை செய்தார். கமலால் தான் எனக்கு அந்த வாய்ப்பே கிடைத்தது, இதுபோல அவர் செய்த உதவிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது அவரது ராஜ்கமல் தயாரிப்பில் ‘தர்மன்’ படத்தில் நடிப்பது மிகப்பெரிய சந்தோஷமாகவும், பொறுப்பாகவும் இருக்கிறது” என்று சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
