LATEST NEWS
பக்தர்களை கட்டாயப்படுத்த கூடாது…! இனி கோவிலில் உள்ள கடைகளில் இது கட்டாயம்…. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு…!!
தமிழகத்தில் உள்ள ஆன்மிகத் தலங்களின் வளாகங்களுக்குள் செயல்படும் அனைத்துக் கடைகளிலும் அர்ச்சனை மற்றும் வழிபாட்டுப் பொருள்களின் கட்டண விவரங்களை பக்தர்களின் பார்வையில் படும்படி தெளிவாகப் பலகையாக வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாகக் கோவில் நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், அங்கீகரிக்கப்பட்ட பூஜைப் பொருட்களை மட்டுமே தரமாகவும் தூய்மையாகவும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொருட்களின் மீது அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) கூடுதல் தொகைக்கு விற்பனை செய்வதற்கும், பக்தர்கள் விரும்பாத பொருட்களைக் கட்டாயப்படுத்தி வாங்கச் சொல்வதற்கும் கடைக்காரர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், பிளாஸ்டிக் கவர்களில் பூஜைப் பொருட்களை விநியோகிப்பதைத் தவிர்த்து, பாரம்பரிய மஞ்சள் துணிப்பைகளை மட்டுமே நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதோடு மட்டுமின்றி, ஆலயங்களின் வெளிப்பகுதிகளிலும், வழித்தடங்களிலும் அத்துமீறி ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்து வழிபாட்டுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும், தங்களது கடைகளைச் சுற்றியுள்ள பகுதிகளை எந்நேரமும் குப்பைகளின்றித் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் வணிகர்களுக்குக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
