CINEMA
1000 கோடி வசூல் பட ரகசியத்தை உடைத்த அர்ஜுன் தாஸ்…கல்கி 2′ படத்தில் தீபிகா படுகோன் இல்லையா?… சாய் பல்லவி, ஆலியா பட் என்ட்ரி… அர்ஜுன் தாஸ் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ்…
திரையுலகில் தனது கம்பீரமான மற்றும் வித்தியாசமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களம் காணவிருக்கிறார். ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து இணையத்தில் வேகமாக டிரெண்டாகி வரும் நிலையில், திரையரங்குகளில் தொடர்ந்து காமெடி படங்கள் கல்லா கட்டி வரும் வரிசையில் இந்த ‘கான் சிட்டி’யும் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘கைதி’ படத்தில் “லைஃப் டைம் செட்டில்மெண்ட்” வசனத்தின் மூலம் கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ், சமீபத்தில் வெளியான பிரம்மாண்ட படமான ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் கிருஷ்ண பகவான் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார். முகத்தைக் காட்டாமல் அவரது குரல் மட்டுமே ஒலித்த அந்தப் பாத்திரம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்ததுடன், படம் 1000 கோடி வசூலையும் கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில், அவரிடம் நேர்காணல் ஒன்றில் “கல்கி 2-ஆம் பாகத்தில் நீங்களே கிருஷ்ணராக நடிக்க வாய்ப்புள்ளதா?” என்று கேட்கப்பட்டதற்கு, “இயக்குநர் நாக் அஸ்வின் சார் மனசு வச்சு கூப்பிட்டா கண்டிப்பா பண்ணிடலாம்” என அர்ஜுன் தாஸ் சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார்.
மறுபுறம், ‘கல்கி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோரை வைத்து விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் சுமதி கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோனுக்கு பதிலாக சாய் பல்லவி அல்லது ஆலியா பட் நடிக்கலாம் என்ற வதந்திகளும் கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகின்றன. தீபிகாவின் வயிற்றில் வளரும் கல்கியாக யார் நடிக்கப்போகிறார் என்ற மர்மம் நீடிக்கும் வேளையில், இரண்டாம் பாகத்தின் இறுதியில் அது கண்டிப்பாக ரிவீல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, அர்ஜுன் தாஸின் இந்த வாரம் ரிலீஸாகவிருக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு ஃபன் ரைடாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
