LATEST NEWS
நடிகர் விஜய் என்பதை மறந்துடுங்க…இது சினிமா கேமரா இல்ல, சிங்கிள் டேக் ஷூட் செய்ய…சட்டசபையில் மோதிய விஜய் – உதயநிதி…எக்ஸ் தளத்தில் பொங்கி எழுந்த உதயநிதி… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!
தமிழகச் சட்டமன்றப் பேரவையின் நிறைவு நாளான இன்று, ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். தனது உரையில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக திமுகவை அவர் கடுமையாக விமர்சித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலமைச்சரின் இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத திமுக உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அவையில் ஒரு குட்டிக்கதையைக் கூற சபாநாயகரிடம் முதலமைச்சர் விஜய் அனுமதி கோரினார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர் ஒருவர் தனது கைகளால் கண்களை மறைத்துக்கொண்டு ஒரு சிறுவனின் தந்தையைத் தேடியதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாணியை சூசகமாகக் குறிப்பிட்டு அவர் அந்தக் கதையைக் கூறி முடித்தார்.
முதலமைச்சர் விஜய்யின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் முதலமைச்சர் விஜய் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அவதூறுகளை அள்ளிவீசி, நடிப்புத் திறமையைக் (Acting performance) காட்டியிருப்பதாகச் சாடியுள்ளார். மேலும், பேரவையின் நேரலை கேமராவைத் சினிமா கேமரா என நினைத்து முதலமைச்சர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி ‘சிங்கிள் டேக்கில்’ ஷூட் செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல என்றும் உதயநிதி விமர்சித்துள்ளார்.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் சினிமாத்தனமான பஞ்ச் டயலாக்குகளும் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் தற்போதைய மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்தப் பதிலும் அதில் இல்லை எனத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் தான் விவசாயிகள் போராடுகிறார்கள் என்று கூறி விவசாயிகளை முதலமைச்சர் கொச்சைப்படுத்தியுள்ளார் என்றும், அவர் கூறிய குட்டிக்கதை அவையின் மாண்புக்கு எதிரானது என்றும் சாடியுள்ளார். “செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனைத் தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்; எனவே நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது தமிழக முதலமைச்சராக அவர் நடந்துகொள்ள வேண்டும்” என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
