LATEST NEWS
கண்ணை மறைத்த காதல்..! காதலிக்கு ‘ஐபோன்’ கிஃப்ட் கொடுக்க இப்படி ஒரு ஐடியாவா..? அசிங்கப்பட்டு, கைதாகி கம்பி எண்ணும் காதலன்… சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!
சென்னை அமைந்தகரை பகுதியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த ஐபோன் பரிசளிக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில், சரவணன் (24) என்ற வாலிபர் செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். காதலிக்கு ஆடம்பரமாகப் பரிசளிக்கப் போதிய பணம் இல்லாததால் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்த இவர், மாதவரம் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட முயன்றுள்ளார். இறுதியில், தனது நான்காவது முயற்சியாக அமைந்தகரை பகுதியில் மலர்விழி என்பவரின் மகளிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
போலீசாரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக மிகவும் திட்டமிட்டபடி, முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டும், தனது இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை மறைத்தும் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். எனினும், இச்சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்த சென்னை அமைந்தகரை காவல்துறையினர், சரவணனின் அடையாளத்தைக் கண்டறிந்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். காதலிக்கு ஐபோன் வாங்கித் தர ஆசைப்பட்ட வாலிபர், இப்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
