LATEST NEWS
பள்ளி அறையில் கள்ளக்காதல்… நேரில் பார்த்த எல்.கே.ஜி சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்…! 20 முறை கத்தியால் குத்தி கொன்ற பள்ளி இயக்குனர்..!!!
பீகார் மாநிலம் பாங்காவில் எல்.கே.ஜி மாணவன் ஆனந்த் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கை போலீசார் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். மவுண்ட் கேரளா பள்ளியில் படித்து வந்த இந்த சிறுவனை, அதே பள்ளியின் இயக்குனர் ராஜீவ் குமார் ரஞ்சன் தான் மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து பள்ளி இயக்குனர் ராஜீவ் குமார் ரஞ்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் எஸ்பி அமிதேஷ் குமார் வெளியிட்டுள்ள தகவலின்படி, பள்ளி இயக்குனர் ராஜீவ் குமார் ரஞ்சனுக்கும் அங்கிருந்த ஒரு பெண் ஆசிரியருக்கும் இடையே தவறான உறவு இருந்துள்ளது. இதனை ஒரு நாள் அந்த எல்.கே.ஜி மாணவன் தற்செயலாக நேரில் பார்த்துள்ளான். சிறுவன் இந்த விஷயத்தை மற்றவர்களிடம் கூறிவிட்டால் தனது சமூக அந்தஸ்தும், பள்ளியின் பெயரும் கெட்டுவிடும் என்று பயந்த இயக்குனர், அந்த பிஞ்சு குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த ஜூன் 22 அன்று, மாணவனை விடுதியின் மேல் தளத்தில் உள்ள குளியலறைக்கு அழைத்துச் சென்று, கூர்மையான கத்தியால் சுமார் 20 முறைக்கு மேல் குத்தி கொடூரமாக தாக்கியுள்ளார்.
கத்திக் குத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அங்கேயே போட்டுவிட்டு இயக்குனர் தப்பி ஓடியுள்ளார். உயிருக்கு போராடிய அந்த சிறுவன் பல மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு, இறுதியில் பாட்னாவில் சிகிச்சை பலனின்றி ஜூன் 29 அன்று பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் மரணத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். தற்போது கொலையாளி இயக்குனர் கைது செய்யப்பட்டு, கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் அந்த பெண் ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
