LATEST NEWS
மருத்துவமனைக்கு நோ… மாந்தீரிகருக்கு எஸ்…! மூடநம்பிக்கையால் மடிந்த குடும்பம்… 10 நாளில் 5 பேர் மர்ம மரணம்..! பின்னணியில் இருக்கும் தாந்திரீகக் கோணம்..!!!
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சிக்கா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெறும் 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 19-ஆம் தேதி குடும்பத் தலைவர் குல்தீப் மஹதோ உயிரிழந்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் அவரது இரண்டு மகள்கள், மருமகள் மற்றும் மகன் என 5 பேர் ஜூன் 29-க்குள் மரணமடைந்தனர். மேலும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த மூத்த பெண்மணி ஒருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தொடர் மரணங்களால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனையில், இந்த மரணங்களுக்கு ‘எபிடெமிக் டிராப்சி’ என்ற ஆபத்தான பாதிப்பு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெயில் ‘அர்ஜிமோன் மெக்சிகானா’ விதைகளின் எண்ணெய் கலக்கப்படும் போது இந்த நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக உடலின் முக்கிய உறுப்புகளில் வீக்கம் ஏற்பட்டு, இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து மரணம் சம்பவிக்கலாம் என்று ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அதிகாரப்பூர்வமான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே தெரியவரும்.
இந்த விவகாரத்தில் மூடநம்பிக்கை மற்றும் மாந்தீரிகப் பின்னணியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு முன்பு இந்த குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டபோது, அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல் ஒரு உள்ளூர் மாந்தீரிகரை நாடியுள்ளனர். அவர் கொடுத்த ஒரு மர்மமான மூலிகைப் பொடியை, கடந்த சில மாதங்களாக அவர்கள் கடுகு எண்ணெயில் கலந்து உணவில் சேர்த்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கடுமையான உணவு நச்சுத்தன்மை தான் இந்த மரணங்களுக்குக் காரணம் என மாவட்ட முதன்மை மருத்துவர் தெரிவித்துள்ளார். தற்போது போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அந்த வீட்டில் இருந்த எண்ணெய் மற்றும் சூர்ண மாதிரிகளைப் பறிமுதல் செய்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
