LATEST NEWS
“தவெக ஆட்சி நன்றாக இல்லை..!” முதல்வர் விஜய் அரசை ஓப்பனாக சாடிய சாலமன் பாப்பையா..! தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!!
மதுரை தனக்கன்குளம் பகுதியில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து அமைத்துள்ள புதிய நூலகத்தின் திறப்பு விழாவில் பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் நிர்வாகம் எப்படி உள்ளது?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல், “தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சி இதுவரை நன்றாக இல்லை” என்று தனது அதிருப்தியை ஓப்பனாகப் பதிவு செய்தார்.
தொடர்ந்து பேசிய சாலமன் பாப்பையா, மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையைத் தான் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்றும், தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கையே போதுமானது என்றும் திட்டவட்டமாகக் கூறினார். மும்மொழிக் கொள்கையானது எதிர்காலத்தில் மற்றொரு மொழியைத் திணிப்பதற்கான வழியாகவே அமையும் என்று எச்சரித்த அவர், தற்போதைய சமுதாயத்தில் பணத்தின் ஆதிக்கமும், அனைத்து நிலைகளிலும் லஞ்சமும் பெருமளவில் அதிகரித்திருப்பது மனிதர்களின் ஒழுக்க மற்றும் பண்பாட்டு மதிப்புகள் குறைவதற்குக் காரணமாக உள்ளதாக வேதனை தெரிவித்தார்.
மூத்த தமிழறிஞரான சாலமன் பாப்பையாவின் இந்த நேரடி விமர்சனம் தவெக ஆளுங்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக அரசியல் களத்தில் கடுமையான அனலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சியினரான திமுக மற்றும் அதிமுகவினர் இந்த விமர்சனத்தைச் சமூக வலைத்தளங்களில் தங்களுக்குச் சாதகமாகப் பகிர்ந்து வரும் நிலையில், தவெக ஆதரவாளர்களோ புதிய அரசுக்கு இன்னும் கூடுதல் அவகாசம் தேவை என்ற தங்களது கருத்துகளை முன்வைத்து விவாதித்து வருகின்றனர்.
